Tuesday, May 28, 2019

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், சில அமைச்சர்கள் சரிவர செயல்படவில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. ஆனாலும், தமிழக அமைச்சரவையில், இப்போதைக்கு மாற்றமில்லை என, ஆளும் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேர்தல் முடிவால், இ.பி.எஸ்., திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, முதல்வராக இருந்த வரை, அவ்வப்போது, அமைச்சர்கள் மாற்றப்படுவர். இதனால், அமைச்சர்கள் அனைவரும், தலைக்கு மேலே கத்தி தொங்குவது போல, எப்போது வேண்டுமானாலும், அமைச்சர் பதவி காலியாகலாம் என்ற அச்சத்தில், அடக்கி வாசிப்பர்.
மிரட்டல்

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர்கள் மாறினர்; அமைச்சர்கள் மாற்றம் இல்லை. முதல்வராக, இ.பி.எஸ்., பொறுப்பேற்ற போது, அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து அமைச்சர்களாக உள்ளனர். பல எம்.எல்.ஏ.,க்கள், 'அமைச்சர் பதவி தராவிட்டால், தினகரன் பக்கம் செல்வோம்' என்று மிரட்டிய போதும், அமைச்சரவையை மாற்றி அமைக்க, இ.பி.எஸ்., முன்வரவில்லை.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின், சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது. தொடர்ந்து, இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் மறைவு, ஒரு எம்.எல்.ஏ., பதவி பறிப்பு போன்ற காரணங்களால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 114 ஆனது.இவர்களில், மூன்று பேர், தினகரன் ஆதரவாளர்கள்; இருவர், அ.தி.மு.க.,விற்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தலுடன், காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் உதவி இல்லாமல், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, குறைந்தது, ஒன்பது தொகுதிகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற முடிவுடன், அ.தி.மு.க., களம் இறங்கியது.ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், ஆட்சியை காப்பாற்ற முடியும் என்பதால், அ.தி.மு.க., தலைமை, லோக்சபா தேர்தலை விட, சட்டசபை இடைத்தேர்தலுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்தது.
சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களாக, அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர், தேர்தல் பணியை, ஒழுங்காக செய்யவில்லை என்று, குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி தலைமை கொடுத்த பணத்தை, சிலர் முறையாக வினியோகம் செய்யவில்லை என்று, கட்சியினர் புகார் கூறினர்.அதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்ததும், புகாருக்குள்ளான அமைச்சர்களை, 'கழற்றி' விட, முதல்வர் முடிவு செய்தார். ஜெயலலிதா பாணியில், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவிற்குஅமையவில்லை.
அதிரடி ஆட்டம்

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, ஒரு தொகுதியை மட்டுமே பெற்றது. சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளை பெற்றது. தி.மு.க., அதிகமாக, 13 இடங்களை கைப்பற்றியது.அ.தி.மு.க.,விற்கு தற்போது, 123 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைத்தால், அதிரடி ஆட்டத்தை தொடர, இ.பி.எஸ்., திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக இடங்கள் கிடைக்காததால், அமைச்சரவை மாற்றம் உட்பட, அதிரடி நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில், இப்போதைக்கு மாற்றமில்லை என்பதால், அமைச்சர்கள் நிம்மதி அடைந்துஉள்ளனர். அடுத்து, ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் வர உள்ளதால், அதிரடி நடவடிக்கைகளை, தற்காலிகமாக, முதல்வர் கைவிட்டுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...