Monday, November 10, 2014

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்………..


இந்தியாவில் உள்ள சாணக்கிய அரசியல்வாதி கலைஞர் ஒருவர் தான் என்றால் மிகையில்லை. இதை உணர்ந்து தான் ஒருமுறை அறிஞர் அண்ணா கழக மேடையில், திமுகவை காப்பாற்ற கருணாநிதி உள்ளார் என்றார். அவர் கூறியது 100 சதவிதம் உண்மை. 50 ஆண்டுகாலத்தில் திமுக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. பல சோதனையான காலக்கட்டம் திமுக அழிந்தே விட்டது பலரும் முடிவு செய்த நிலையில் பினிக்ஸ் பறவையாக பலமுறை அழிவில் இருந்து கழகத்தை காத்த சாணக்கியர் கலைஞர்.

திமுக தோன்றிய காலத்தில் இந்தியாவில் பல கட்சிகள் தோன்றியது, ஆண்டது, அழிந்தது, தோன்றிய வேகத்திலேயே அழிந்ததும் உண்டு. ஆனால் திமுக மட்டும் சேதராங்களோடு தப்பியது. அதற்க்கு காரணம் கலைஞர், கழகத்தின் கொள்கைகள், அதன் தொண்டர்கள். கழகத்திற்காக தொண்டர்கள் புயல் போல் புறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று பம்முகிறான் காரணம்மென்ன?.

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திராவிட பற்றாளர்களை, விசுவாச கழக தொண்டர்களை புறக்கணித்தனர். பணம் உள்ளவனுக்கே பதவி என்ற நிலையை கழகத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். தொண்டர் பலம், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை. கடந்த 20 ஆண்டுகளத்தில் கழகம் போட்டியிட்ட தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலை நோக்கினால், சில இரண்டாம் கட்ட தலைவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு பின் தங்களது பிள்ளைகளுக்கு, இளவல்களுக்கு சீட் வாங்கி தந்து சட்டமன்றத்துக்கும், பாராளமன்றத்துக்கும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தின் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறார்கள். கட்சி பதவிகளிலும் இதே நிலை தான்.

திமுகவில் உழைப்பவனுக்கு பதவியில்லை. பதவியில் இருப்பவனுக்கு பிள்ளையாய் பிறந்தால் பதவி என்ற நிலை. திமுகவில் இருந்து ஓடியவர்களால் உருவான அதிமுகவை பாருங்கள், டீ கடை நடத்திய பன்னீர்செல்வம் முதலமைச்சராகிறார். மாடு மேய்த்தவர் எம்.எல்.ஏவாகிறார். இன்று சட்டமன்றத்தில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் ஏழைகள். மாநகர மேயர்களாக, நகரமன்ற தலைவர்களாக உள்ளவர்கள் அந்த பதவிகளுக்கு புது முகங்கள். அவர்களுக்கு சீட் தந்து ஜெயிக்க வைத்து அந்த கட்சி தலைமை அழகு பார்க்கிறது. இதை பார்த்து அதிமுகவுக்கு போனால் என்றாவது ஒருநாள் பதவி நிச்சயம், உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என எண்ணுகிறான் அங்கு போகிறார்கள். கட்சி பதவியாவது கிடைக்கிறது.


திமுகவில்?. எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. மழைக்காக ஒதுங்கியவன் வீடே எனக்கு சொந்தம் என்பதை போல கலைஞரின் வாரிசுகள் என்ற அடைமொழியோடு பதவிக்கு வருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிக்காக ஸ்டாலின் உழைத்தார், உழைக்கிறார். அவருக்கு பதவிகள் தருவது நியாயம். ஆனால் கட்சிக்காக உழைக்காத அழகிரி, கனிமொழி, தயாநிதிக்கு எதற்காக பதவிகள். ஸ்டாலின்க்கு அமைச்சர் பதவி தந்ததும், மூத்த மகன் அழகிரி பதவியில்லாமல் இருந்தால் மதிக்கமாட்டார்கள் என்று தென் மண்டல அமைப்பாளர் பதவியை உருவாக்கி தந்ததோடு, மத்திய அமைச்சராக்கப்பட்டார். மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு பதவி தந்தோமே என துணைவியானரின் மகளுக்கு எம்.பி பதவி தரப்பட்டது. கழகத்தின் தூண் என வர்ணிக்கப்பட்ட முரசொலிமாறன் இறந்ததும் அவரது பிள்ளையான தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி.

இந்த மூவரும் கட்சி வளர்ச்சிக்காக எப்போதாவது பாடுபட்டார்களா?, பிரச்சனைக்குரிய சமயத்தில் கட்சியை தாங்கி பிடித்தார்களா?, கட்சிக்காக சிறை சென்றவர்களா?, கட்சிக்காக அடி உதை பட்டவர்களா? ஏதற்காக இவர்களுக்கு பதவி திமுகவில் பதவி வாங்க இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. பிரச்சனை என்றதும் ஒடிஒலிந்துக்கொண்ட அழகிரி, கட்சிக்கு துரோகம் செய்த தயாநிதியை கட்சி தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இவர்களை விட தடியடிப்பட்டு, சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து கட்சிக்காக கொள்கைக்கா இன்றும் உழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சீட் தந்திருந்தால் கழகம் இக்கட்டான நிலையை சந்தித்திருக்காது. ஆனால் எதையும் கலைஞர் செய்யவில்லை.

திமுகவின் இளைஞர் அணி அமைப்பாளராக இன்னும் ஸ்டாலினே கோலோச்சுகிறார். கட்சியின் பொறுளாளர் என்ற பதவி தந்ததும் இளைஞர் அணி பதவியை வேறு ஒரு இளைஞரிடம் தந்துயிருக்க வேண்டாமா?. மகளிரணி, மாணவரணி, தொண்டரணி செயல்படுகிறதா என்பது பூத கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலையில் உள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள அந்த அணியினரிடம் ஒரு உத்வேகம் தரப்படுகிறதா என்றால் அதுவும்மில்லை. புதியவர்கள் கட்சியில் சேர்ந்து கட்சியின் பொறுப்புகளுக்க வர நினைப்பவர்களுக்கு அணிகளிலாவது பதவி தரப்படுகிறதா என்றால் அதிலும் சீட் புக்கிங் நடக்கிறது.

இதையெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மாற்று கட்சியிலிருந்து பணத்தை, சொத்தை காப்பாற்றிக்கொள்ள கழகமே கோயில் என ஓடிவருபவர்களுக்கு பதவிகள் தருவதில், சீட்கள் தருவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்போ கட்சிக்காக உழைப்பவன் முட்டாளா?. இப்படியிருந்தால் கழகத்தில் எந்த ஒரு விசுவாச தொண்டனும் சேரமாட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கலைஞரே, முதலில் கட்சியில், குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதன்பின் அணி அணியாக இளையோர்களை சேர்க்க வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...