Friday, April 21, 2017

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்னும் விலகாத சந்தேகங்கள்.???

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் எதுவும் முடிவுக்கு வரவில்லை.
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக உள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானது, 'ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கோர வேண்டும்' என்பது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடையாக உள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர் பன்னீர்செல்வம் அணியினர்.
"ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன ஆனது என்ற உண்மையைக்கூட பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதன்பின்னணியில் உள்ள மர்மங்களும் படிப்படியாக விலகி வருகின்றன.
"எங்கள் ஆய்வில் ஏராளமான உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அவரது மரணம் நிகழ்ந்து 60 நாட்களுக்குப் பிறகே பத்திரிகையாளர்களை சந்தித்தனர் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்.
மக்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக கூட்டப்பட்ட இந்த சந்திப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை வைத்தே, சில உண்மைகளை வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர் மருத்துவர்கள் புகழேந்தி மற்றும் ரமேஷ் ஆகியோர். இந்நிலையில், கடந்த மார்ச் 6-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டார். " இதுவரையில் வெளிவராத முதல்வரின் நோய் மற்றும் சிகிச்சை குறித்தான பல புதிய தகவல்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்தது. சில தகவல்கள் முழுமை இல்லாமல் முரண்டுபாடுகளுடன் இருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதை வரவேற்க வேண்டும். முதல்வர் மரணம் தொடர்பான எங்களது சந்தேகங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது" என்கின்றனர் மருத்துவர் புகழேந்தி மற்றும் ரமேஷ் ஆகியோர். இதுகுறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவர் ரமேஷ் ஜெயலலிதாவுக்கு தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக் குறைவு (Hypo thyroidism), சிருசிடு குடல் உபாதை (Irritable Bowel syndrome), தோல் ஒவ்வாமை நோய் (Atopic Dermatitis) அதற்காக அவர் வாய்வழியாக ஸ்டீராயிடு (Steroid) மாத்திரை உட்கொண்டு வந்தது, மைட்ரல் வால்வில் ஏற்பட்ட ஓட்டை, அதில் ஏற்பட்ட படிமம் (Vegetation), சுருங்கும் தன்மையில் மாற்றம் ஏற்படாத இருதய செயல்பாட்டுக் குறைவு (Heart failure with preserved systolic function) எனப் பல விஷயங்கள் தற்போது வெளியில் வந்துள்ளன.
டிசம்பர் 3-ம் தேதி முதல்வருக்கு தொண்டையில் சளி அதிகம் சுரந்ததால், இருமல் அதிகமானது. இதனால் அவருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது என அப்போலா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவோ, பாபு ஆப்ரஹாம் மற்றும் பாலாஜி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலோ எதுவும் பேசவில்லை.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு 5 -7 நாட்கள் முன்னரே, 'விட்டுவிட்டு காய்ச்சல் இருந்தது' என்றும் 'அதிகமான குடல் ஓட்டம் கூடவே இருந்தது' என்றும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருடைய சர்க்கரையின் அளவு 560 mg/Dl. ஏன் இந்த அளவு சென்றது? போயஸ் இல்லத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன?
ஏன் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது?
சிறுநீர் தொற்றுக்காக வாய்வழியே கிருமிக்கொல்லி மருந்து எடுத்து வந்துள்ள நிலையில் சிறுநீர் தொற்றுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தால் அவருடைய மருத்துவ பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற மருத்துவரீதியான கேள்விகளுக்கும் இவர்களிடம் பதில் இல்லை" என ஆதங்கப்பட்டார் மருத்துவர் ரமேஷ்.
மருத்துவர் புகழேந்தி, " அப்போலோ மருத்துவமனையின் முதலுதவி மருத்துவர்கள் ஆம்புலன்சில் வந்து அவரைப் பார்த்தபோது இருந்த ஆக்சிஜன் அளவு 48 சதவீதமாக இருந்தது. அனுமதிக்கப்படும்போது அவர் அரைத் தூக்க நிலையில் இருந்தார் என்றும் மூச்சுத் திணறல் அதிகம் இருந்தது என்றும் மருத்துவ அறிக்கையில் தெளிவாக உள்ளது. அனுமதியின்போது முதல்வரின் ஆக்சிஜன் அளவு ஏன் 48 சதவீதமாகக் குறைந்தது? போயஸ் இல்ல மருத்துவமனையில் ஆக்சிஜனை அளக்கும் கருவியோ, ஆக்சிஜன் செலுத்தும் கருவியோ இல்லையா? முதல்வரின் உடல் நலன் குறித்து அவரது மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் (Protocols) உண்டுதானே? அவை முறையாக பின்பற்றப்பட்டதா?
அந்த குறிப்புகள் பொது மக்கள் பார்வைக்கு வந்தால் சந்தேகங்கள் உடனடியாகத் தீரும் அல்லவா?
போயஸ் இல்லத்தில் அவர் இருக்கும்போதே சிறுநீர் தொற்று பிரச்னை இருந்துள்ளபோது கடைபிடிக்கப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனைகள், மருந்து விபரங்கள், மருத்துவ சிகிச்சை குறிப்புகள், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும்நிலையில், இதுபற்றி அப்போலோ மருத்துவர்களும் கேட்டுப் பெற்றார்களா?
எவையெல்லாம் போயஸ் இல்ல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டது?
முறையாக கட்டுப்படுத்தப்படாத சிறுநீர் தொற்றின் காரணமாகவும் கட்டுப்படுத்தப் படாத சர்க்கரை அளவின் காரணமாகவே அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்குக் காரணம் எனும் வாதத்திற்கான பதிலை எப்படி அடைவது?
போயஸ் இல்ல மருத்துவ குறிப்புகளையும், அனுமதியின்போது அப்போலோவில் பதிவான குறிப்புகளையும் ஒளிவு மறைவின்றி ஒப்பிடும்போதே உண்மை வெளிச்சத்துக்கு வரும்" என்றவர், ஜெயலலிதா மரணம் தொடர்பான புதிய தகவல்களைப் பட்டியலிட்டார். புகழேந்தி.
1. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் என்டெரெக்காக்கஸ் (Enterococcus) கிருமி ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒருவாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல்வருக்கு ரத்த கல்ச்சர் (Blood Culture) அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே செய்தார்களா? ஒருவேளை அப்படி செய்திருக்கும்பட்சத்தில் முன்கூட்டியே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை அது கொடுத்திருக்கும்.
2. சிகிச்சைக்காக அனுமதித்த நேரத்தில், முதல்வரின் ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததென்று எய்ம்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ அறிக்கையில் அது கூடுதலாக இருந்ததென்றும் (போயஸ் இல்லத்தில் 140/70, தீவிர சிகிச்சை அறையில் 140/100) முரண்பட்ட தகவல்கள் பதிவாகியுள்ளன.
ஏன் இந்த வேறுபாடு?
3. எய்ம்ஸ் மருத்துவர்கள் முதன்முதலில் முதலமைச்சரை பரிசோதித்தது 05.10.2016 எனும்போது, அப்போல்லோ மருத்துவர்கள்தான் மேற்படி இரத்த அழுத்தம் குறித்தான தகவலைக் கொடுத்திருக்க வேண்டும். எய்ம்ஸ் அறிக்கையில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது எனப் பதிவானது? இதன் நீட்சியாக எய்ம்ஸ் அறிக்கையில் ரத்த அழுத்தத்தை கூட்டுவதற்கான மருந்துகள் (Inotropic agents) மருத்துவமனைக்குள் அனுமதித்தபோதே கொடுக்கப்பட்டது என இருப்பதும் அப்போலோ அறிக்கையில் அது விடுபட்டிருப்பதும் ஏன்?
4. அப்போலோ அறிக்கையின் முதல் பக்கத்தில் அவருக்கு ஃபர்ஸ்ட் டிகிரி ஏவி பிளாக்(first degree AV block) இருந்ததென்றும் நான்காம் பக்கத்தில் 'செகண்ட் டிகிரி ஏவி பிளாக், விட்டுவிட்டு இருந்தது' என்றும் (AV block என்பது இ.சி.ஜி.யில் இருதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றம்) முரண்பட்ட தகவல் உள்ளது. அப்போலோ அறிக்கையில் முதல் பக்கத்தில் ஏன் Second degree AV block பதிவாகவில்லை?
5. 'இருதயத்துடிப்பு நின்றபின் முதல்வருக்கு உடனடியாக அவசர இருதய, நுரையீரல் மீட்கும் பணி (CPR) 20 நிமிடம் கொடுக்கப்பட்டது' என அப்போலோ மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், எய்ம்ஸ் அறிக்கையில் 'அது 45 நிமிடம்' என பதிவாகியுள்ளது. அதே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், எக்மோ கருவி (ECMO) முதல்வரின் அறையிலேயே இருந்ததாகவும் அங்கேயே அது பொருத்தப்பட்டதென்றும் மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், எய்ம்ஸ் அறிக்கையில், 'அவரது உடலை குறைவெப்ப நிலைக்கு (hypothermia) கொண்டுசென்றனர்' என்றும் 'அவருக்கு தொடர் ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதென்றும் (Continous haemo dialysis), திறந்த இருதய மசாஜ் (Open cardiac massage) அளிக்கப்பட்டதென்றும், செயற்கை துடிப்பான்(பேஸ்மேக்கர்) இருதயத்தின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டதென்றும் (External Pacemaker) அன்றைக்கு முதல்வர் இரவு 09:30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
6. டிசம்பர் 4-ம் தேதி மாலை 04.20 மணிக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை முதல்வர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, பணி மருத்துவரும் சசிகலாவும் அந்த அறையில்தான் இருந்துள்ளனர். அவருக்கு திடீரென்று இருதயத் துடிப்பு நின்றுபோய்விட்டதாக, பிப்ரவரி 6-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், சமீபத்திய அப்போலோ அறிக்கை பக்கம் 11-ல் அவருக்கு இருதயத் துடிப்பில் சிறு மாற்றம் நிகழ்ந்ததாகவும் (Unsustained Ventricular Tachycardia) அதன் காரணமாக அவருக்கு ஊசி மூலம் மெக்னீசியம் சல்பேட் ரெண்டு கிராம் செலுத்தப்பட்டதாகவும் அதன்பிறகு சிறு இடைவேளைக்குப்பின், (நேரம் குறிப்பிடப்படவில்லை) மீண்டும் அவருக்கு இருதயத் துடிப்பில் சிறு மாற்றம் ஏற்பட்டு, பின்னர் அது மோசமான பாதிப்பிற்கு (Ventricular fibrillation) அவரை இட்டுச்சென்றது என்றும் மேற்படி அறிக்கையில் உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis) பொட்டாசியத்தின் அளவு 6.2 meq/Dl இருந்தது தெரிய வந்துள்ளது. (வழக்கமாக இருக்கவேண்டிய அளவு 3.5 லிருந்து 5.5 meq/Dl வரை) ஆக பொட்டாசியம் அளவு கூடியதன் காரணமாக ஏன் இருதயத் துடிப்பு செயலிழந்து போனது (Cardiac arrest) காரணமாக இருக்கக்கூடாது? இருதயத்துடிப்பில் ஏற்பட்ட மாற்றம் அவருக்கு முன்னரே நிகழ்ந்துள்ள நிலையில், (அப்போலோ அறிக்கை பக்கம் 9,10) உரிய மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் ஜெயலலிதா இருந்தாரா என்ற சந்தேகமும் எழுகிறது.
7. முதல்வருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சர்க்கரை வியாதிக்கு 20 வருடகாலம் அவர் மாத்திரை உட்கொண்டு வந்தார் என்கிறார். அந்த மாத்திரையின் பெயரை அவர் குறிப்பிடாதது ஏன்? உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவருக்கு பீட்டா பிளாக்கர்ஸ் (Beta Blockers) மற்றும் பிற மாத்திரைகள் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிடும் அறிக்கை, 'எவ்வளவு காலம் அவர் அதை சாப்பிட்டார்?' எனக் கூறவில்லை. மாத்திரை உட்கொண்ட காலத்தை குறிப்பிடத் தெரிந்த இவர்களுக்கு மாத்திரை பெயரைக் குறிப்பிடவேண்டும் எனத் தெரியாதா? தைராய்டு பாதிப்புக்கும் தோல் ஒவ்வாமைக்கும் சிடுசிடு குடல் உபாதைக்கும் கூட எவ்வளவு காலம் மாத்திரை உட்கொண்டார் என்ற தகவல் இல்லை.
8. முதல்வரது எடை 106 கிலோ, உயரம் 5 அடி என எய்ம்ஸ் அறிக்கையில் உள்ளது. இந்த அடிப்படை மருத்துவ பதிவுகள் கூட அப்போலோ அறிக்கையில் இல்லை. ஏன்?
9. முன்னால் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் உள்ள பி.எச்.பாண்டியன் பேசும்போது, ' முதல்வரின் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மருத்துவர் சந்தாராம், முதல்வர் உட்கொள்ளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தால் (Pioglitazone, Rosiglitazone?) அவருக்குப் பக்கவாதம் ஏற்படவாய்ப்புள்ளது என்பதை தெரியப்படுத்தியதன் காரணமாகவே 2016 மே மாதத்துக்குப்பின், சிகிச்சை பெறுவதற்கு மறுக்கப்பட்டார்' என்ற குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், முதல்வர் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 20 வருட காலம் அவர் என்னென்ன மாத்திரைகள் உட்கொண்டு வந்தார் எனத் தெளிவுபடுத்துவதுதான் தவறான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடையைக் கொடுக்கும். எயிம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையிலும் கூட சர்க்கரை வியாதிக்கு 20 வருட காலம் அவர் என்னென்ன மாத்திரைகள் உட்கொண்டு வந்தார் எனக் குறிப்பிடவில்லை. Pioglitazone, Rosiglitazone மாத்திரைகள்கூட பின்விளைவாக இருதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக இருந்தும், அது தொடர்பாக கேள்வி எழுப்பாமல் இருந்தது எதனால்?
10. முதல்வருக்கான சிகிச்சையில் இரண்டு விஷயங்களை பார்க்கும்போது அது உண்மை அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. மைட்ரல் வால்வில் ஏற்பட்ட பிரச்சினையை எப்படி கையாள்வது என்பதில் வேறுபாடு இருந்துள்ளது. அப்போலோ மருத்துவர்களிடம், அறுவை சிகிச்சை மூலம் கையாளவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. எயிம்ஸ் மருத்துவர்களோ, முந்தைய / தற்போதைய எக்கோ கார்டியோ கிராம் முடிவுகளை வைத்து கசிவில் பெருமளவு மாற்றம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை உடனடித் தேவையில்லை என்பதை வலியுறுத்தியுள்ளனர். மைட்ரல் வால்வில் ஏன் ஓட்டை (Perforation) ஏற்பட்டது? இரண்டாவது, நுரையீரலின் வெளி அடுக்கில் இருக்கும் நீர்கோர்ப்பை (Pleural effusion) எப்படி சரி செய்வது என்பதிலும் வேறுபாடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. அதை விரைந்து வெளியில் எடுக்கவேண்டும் என்பது அப்போலோ மருத்துவர்களின் நிலைப்பாடாக இருக்க, எய்ம்ஸ் மருத்துவர்களோ, 'உள்வரும் நீர்க்கோர்ப்பின் அளவைக் காட்டிலும் வெளியேரும் நீரின் அளவு சற்று அதிகமாக இருந்தாலே போதுமானது' என உறுதியாக இருந்தனர்.
11. 'செப்டம்பர் 24 அன்று அவரது மூச்சுத் திணறல் பெரிதளவு குறையவில்லை. வேகமான மூச்சிரைப்பும் ஆக்சிஜன் தேவையும் சற்று குறைந்திருந்தன' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நாளில் குறைந்துபோன இருதயத்துடிப்பைக் கூட்ட டோப்பமின் ஊசி மருந்தும் குறைந்துபோன ரத்த அழுத்தத்தைக் கூட்ட நார் அட்ரினலின் ஊசி மருந்தும் கொடுக்கப்பட்டது என இருக்கையில், செப்டம்பர் 23 அன்று எடுக்கப்பட்ட நெஞ்சு எக்ஸ்ரேயில் இருபுற நுரையீரல்களின் நடு மற்றும் அடிப்பகுதிகளில் நீர் கோர்த்திருந்தது என இருக்கும்போது, 'வழக்கமான உணவை அவர் உட்கொண்டார்' என அப்போலோ அறிக்கை கூறுவதில் சந்தேகம் எழுகிறது. எய்ம்ஸ் அறிக்கையில் அவருக்கு மூச்சுக்குழாய் சுருங்கியதன் விளைவாக திரும்பத் திரும்ப மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது எனக் குறுப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நுரையீரல்களின் வெளி அடுக்கில் நீர் சுரந்திருந்தது (Bilateral Pleural Effusion) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சூழலில் அவர் வழக்கமான உணவை உட்கொண்டதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
12. முதலமைச்சருக்கே இரத்த சோகை இருந்தது என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, '10 என்ற அளவில் இருந்த ஹீமோகுளோபின் அளவு, படிப்படியாக குறைந்து 6.8 grams/Dl ஆக குறைந்தது' என்று மருத்துவ அறிக்கை பக்கம்7-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இருதய செயல்பாட்டுக் குறைவுக்கு இரத்த சோகையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பத்து கிராம் என்பது சற்றுக் குறைவுதான் என இருக்கையில் போயஸ் இல்லத்தில் அவருக்கு அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? அதன் முடிவு என்ன? இரத்த சோகைக்குக் கூட பரிசோதித்து, அதற்கான சிகிச்சையை போயஸ் இல்லத்தில் அளித்திருக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது.
13. முதல்வருடைய இருதயத் துடிப்பில் மாற்றம் என்பது பலதடவை அவருக்கு வந்து போயுள்ள நிலையில், அது மோசமான நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்பில்லை என்பதை எப்படி உறுதி செய்தார்கள்? 04.12.2016 அன்று ஏற்பட்ட இதய முடக்கத்தின் முன்னோட்டமாக ஏன் அது இருந்திருக்கக் கூடாது? 29.11.2016 அன்று அவருக்கு பலமுறை (PVC) வந்து போனது பதிவாகியுள்ள நிலையில், அவரை மீண்டும் தீவிர சிகிச்சை அறைக்கு ஏன் மாற்றவில்லை?
14. இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவின் மாற்றம், குறிப்பாக உயர் அளவு இருதயத் துடிப்பை செயலிழக்கும் தன்மை (Cardiac arrest) கொண்டது. அவருக்கு இருதயத் துடிப்பில் மாற்றம் அடிக்கடி வந்து போயுள்ள நிலையில், குறிப்பாக இரத்தத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பிற தேவையான விஷயங்கள் அளக்கப்பட்டு, தேவைக்கேற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அறிகையில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி காலையில் அது உயர் விளிம்பிற்கு சென்றுள்ளது. அதற்காக மருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் மறுநாள் காலை அது வழக்கமான அளவை எட்டியது. அன்று மாலை 04:20 மணிக்கு அவருக்கு இருதயத் துடிப்பு செயலிழந்த பாதிப்பு, (Cardiac arrest) ஏற்பட்டபின் செய்த இரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis)-ல் பொட்டாசியத்தின் அளவு 6.2 என இருந்ததால் அதைக் குறைப்பதற்காக, கால்சியம் குளூக்கோனெட், இன்சுலின்/டெக்ஸ்ட்ரோஸ், பை கார்பனேட் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவையனைத்தும் இரத்தத்தில் உள்ள பொட்டாஷியத்தின் அளவை குறைக்க கொடுக்கப்பட்ட சிகிச்சைகள். எனவே, இருதயத் துடிப்பு செயலிழந்து போனதற்கு உயர் பொட்டாசிய அளவு ஏன் காரணமாக இருக்கக்கூடாது?
டிசம்பர் 3-ம் தேதி காலையில் அவருக்கு பொட்டாஷியத்தின் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், அவரை ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவில்லை.?
இதில், மருத்துவமனையின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பிப்ரவரி 6 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இருதயத்துடிப்பு செயலிழந்து போனதற்கு பொட்டாஷிய அளவு காரணமா? என்று கேள்வி எழுப்பியபோது, அன்று காலை செய்த பரிசோதனையில் இரத்தத்தில் பொட்டாசிய அளவு வழக்கமானதாக இருந்தது என்று பாபு ஆபிரகாம் பதிலளித்தார். ஆனால், முந்தைய நாளில் வழக்கமான அளவின் உச்சத்தை அது எட்டியிருந்தது என்பதையும், இதய முடக்கம் வந்தபின் அதன் அளவு அதிகரித்தது (6.2 meq/Dl) என்பதையும் ஏன் மறைக்க வேண்டும்?
" ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இறந்தார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் தீவிர சந்தேகம் வலுத்த நிலையில் தான், அறிக்கை வடிவில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.
ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
முதல்வரின் மரணத்துக்குக் காரணமான திடீரென இதயத் துடிப்பு நின்று போனதற் கான காரணத்தை அறிவியல் மற்றும் சட்டரீதியாக அணுகுவதுதான் பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தை தீர்க்கும் ஒரே வழி" என்றார் வேதனை கலந்த முகத்துடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...