Tuesday, October 14, 2014

ஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்றோர்..!

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழாவிற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திருவிழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். இவளும் அமர்ந்தாள். இவள் அருகில் ஒருவர் வந்தார். கன்னத்தைக் கிள்ளினார். தலையை வருடினார். பாப்பா உன் பெயர் என்ன என்று கேட்டார். தீபா அகர்வால் என்றாள், அந்த சிறுமி.

அந்த மனிதர், அவளது பெற்றோரை நிமிர்ந்துப் பார்த்து என்ன விலை என்று கேட்டார். ‘ஏழாயிரம்தான் சாமி..!’ என்றார், அவளது தந்தை. அதிக விலை சொல்றீங்களே.. என்றார். ‘இல்லைங்க…! இதைவிட குறைக்க முடியாது!’ என்றனர், அவளது பெற்றோர்.

சரி விடுங்க! நீங்க கேட்கிற பணத்தை கொடுத்திடுறேன் என்ற அவர் பணத்தை எடுத்து, அவளது பெற்றோரிடம் நீட்ட, அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு சிறுமியை அவர்களிடம் தள்ளுகிறார்கள். அவள் அழுகிறாள். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள்.

பாப்பா பயப்படாதே. நான் உன்னை நல்லா பாத்துக்கறேன். சாக்லெட் வாங்கித் தர்றேன் வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார் அந்த மனிதர். சிறுமி மிரண்டு போய் பெருங்குரலெடுத்து அழுகிறாள். சிறிது நேரத்தில் நான்கைந்து பேர் வந்து தூக்கி வண்டியில் போட்டு, அவளை கொண்டு சென்றுவிடுகிறார்கள். அவளது அழுகுரல் காற்றோடு கலந்து காணாமல் போய்விடுகிறது.

இது சினிமா காட்சி அல்ல. ராஜஸ்தான் மாநிலத்து கிராமங்களில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடூரம். பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். அதுவும் ஆடு, மாடுகளைவிட குறைவான விலைக்கு!

மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். சிறுமி, வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள்.

இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்’’ என்கிறார்கள்.

இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக் காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது.

இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகிவிடுகிறார்கள். முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம்.

ஒருவர் தனது செல்வ நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.

இந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள்.

முன்பு தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு சோகமாக இருந்தாலும், அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கை அதைவிட மகாமோசம்.

பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்துகொள்கிறார். வீட்டு வேலைக்கும், தனது தேவைக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்.

சிலர் பாரோக்களை வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பல மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கிறார்கள்.

பாரோக்களின் மனக்குமுறல்:

கொல்கத்தாவில் வசிக்கும் மெகரம் சொல்கிறார்..

“ஆடு, மாடுகளைவிட கேவலமான வாழ்க்கை எங்களுடையது. பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சித்தேன். தேடி கண்டுபிடிக்கப்பட்டு கால் எலும்பு முறியும் வரை அடித்து தீர்த்துவிட்டார்கள். அந்த அடிக்கு பயந்து மறுபடியும் ஓட முயற்சிக்கவில்லை.

குழந்தை பிறந்ததும் இருக்கும் மவுசையும் இழந்துவிடுவோம். குழந்தையையும் விற்றுவிடுவார்கள்”

அசாமில் வசிக்கும் மரியம்:

“என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு கண்ணில்லாத 70 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள். அந்தக் கிழவர் என்னை திருமணம் செய்துகொண்டார். வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு, வெளியே வேலைக்கும் போகிறேன். கிழவரையும் கவனித்துக் கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்பிவைப்பார்.

அவருடைய மகளைவிட என் வயது குறைவு. அதைப் பற்றியெல்லாம் அந்த கிழவர் கவலைப் படுவதில்லை”

ஐதராபாத்தில் வசிக்கும் கவுசியா:

“35 ஆண்டுகளில் இரண்டு முறை விற்கப்பட்டேன். என் மகளை திருமணம் செய்துகொடுத்தேன். பாரோவின் பெண் என்பதால் இரண்டாம் தார வாழ்க்கைதான் அவளுக்கு கிடைத்திருக்கிறது. பாரோவின் பெண் என்று மாமியார் அவளை கேவலமாக பேசுகிறார்.

அவளது கணவன் கையாலாகாதவன். யாரும் பெண் கொடுக்காத காரணத்தால் என் பெண்ணை கேட்டு வந்தார்கள். மனைவி என்ற அந்தஸ்து என் மகளுக்காவது கிடைக்கட்டும் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தேன். இந்த சமூகம் திருந்தாது. என்னை ஒரு மாமியாராகவும் மதிப்பதில்லை. சம்பந்தி என்ற அந்தஸ்தும் தரவில்லை. ‘‘உன் மகளை கண்டித்துவை. சொந்த பந்தங்கள் நடுவே உட்கார்ந்து பேசுகிறாள்” என்கிறார்கள். எங்கே என் மகளை விரட்டி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது”

கொல்கத்தாவில் வசிக்கும் முஸ்கான்:

“நான் கொல்கத்தாவிலிருந்து பீகாருக்கு விற்கப்பட்டேன். எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வந்து சேர்ந்த இடத்தில் சுத்த சைவம். மீனை கண்ணால்கூட பார்க்க மாட்டார்கள். மீன் சாப்பிட நாக்கு தவியாய் தவிக்கும். ஆனால் அனுமதி கிடையாது. ஒருமுறை அவர்களுக்குத் தெரியாமல் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதற்காக ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறி என்னை உயிரோடு எரித்துவிட முயற்சி செய்தார்கள்.

நான் இருமுறை விற்கப்பட்டவள். மூன்றாவது முறையும் விற்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயதாகிவிட்டால் வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள். எங்காவது போய் பிச்சை எடுத்துதான் பிழைக்கவேண்டும்”

பீகாரில் வசிக்கும் ரேஷ்மா:

“நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன். அவர்களுக்காக நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன். என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள். சொன்னால் வெட்கக்கேடு. எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்குத் தெரியாது” என்று விரக்தியுடன் கூறுகிறார்.

பெண்களை விற்பனை பொருளாக்கும் நிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...