Thursday, December 15, 2016

மார்கழி.............



மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.
மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதிகாலை அற்புதம்
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.
இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.
சரணாகதியே வழி
பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும், புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.
இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும், ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு பெற்றது.
மதிப்புக்குரிய மார்கழி
மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும் பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...