Friday, December 16, 2016

அதிமுகவின் உண்மை தொண்டர் ஒருவர் தன் மனக் குமுறலை எனக்கு அனுப்பி இதை நீங்கள் வெளியிடுங்கள் என்ற ஆதங்க மடல்.....

---------
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆன்மாவின் ஆசியாலும், எல்லாம் வல்ல இறைவன் தந்த நேர்மையாலும் மனசாட்சி என்னும் மை தொட்டு எழுதும் மடல்.....
மதிப்பிற்குரிய சகோதரி திருமதி.
V. K. சசிகலா அவர்களுக்கு, வணக்கம்.
எங்கள் தாய் அதாவது உங்கள் சகோதரி மாண்புமிகு நம் அம்மா அவர்களுடன் தாங்கள் சுமார் 30 ஆண்டுகள் நிழல் போல் அணுக்க காரியதரிசியாக வாழ்வதற்கு இறைவன் விதித்த விதியாகவே நினைத்து அந்த உங்கள் பாக்கியத்தை பாராட்டி அந்த மதிப்புடனேயே இந்த மடலை எழுத தொடங்குகிறேன்.
நம் அம்மா அவர்கள்
குழந்தை பருவம் முதல் படித்துக்கொண்டிருந்த காலம் வரை......
நடித்துக் கொண்டிருந்த காலம் முதல் புரட்சித்தலைவர் அவர்களால் அரசியல் களத்துக்குள் அழைத்து வரப்பட்ட காலம் வரை......
சத்துணவு துறை - கொள்கைபரப்பு செயலாளர் -நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பெரும் பதவிகள் கொடுக்கப்பட்ட காலம் வரை......
எம் ஜி ஆர் அவர்களின் மறைவுக்குப் பின் பீரங்கி வண்டியிலிருந்து தள்ளி விடப் பட்டு .... பின்...பொதுச்செயலாளர்.... முதல்வர் என ஆனது வரை.... பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும் கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரராகவே இருந்தார். பல்வேறு கஷ்டத்தை கொடுத்த விரோதிகள் கூட யாருடைய பணத்தையாவது கொள்ளையடித்தார் என்றோ, ஏமாற்றி விட்டார் என்றோ சொல்லியதே இல்லை.
தன்னுடைய அரசியல் குருவாகவும், வாழும் கடவுளாகவும் வாழ்வில் வழிகாட்டிய வாரி வாரி வழங்கிய வள்ளலின் சொத்துக்களில் கூட ஒரு சிறு பங்கை எழுதி வாங்கி விட்டார் என்றோ, எம் ஜி ஆர் எழுதி வைத்தார் என்றோ எதிரிகள் கூட சொன்னது இல்லை.
நேர்மை குறைபாடும், பண ஆசையும் இருந்திருந்தால் எம் ஜி ஆர் அவர்களின் சொத்தையே வேண்டிய அளவிற்கு வாரி சுருட்டி இருக்கலாம். எப்போதும் தன் மானமும் சுய மரியாதையும் நிறைந்தவராகவே புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்திருக்கிறார்.
ஆணாதிக்க சமுதாயத்தில் வளைந்து கொடுக்காத அவரது வான் உயர்ந்த ஆளுமைதான், அந்த ஆளுமையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தழுவிய தோல்விகளின் வசைபாடுதல்கள்தான் அம்மா மேல் வைத்த விமர்சனங்களின் நிதர்சனங்கள்.......
இது உண்மைதானே?!.
ஆனால் ......
நீங்கள் எப்போது அவர்களுடன் வந்து வீட்டோடு தங்க ஆரம்பித்தீர்களோ, அப்போதே தரம் குறைந்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டார் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதானே?.
என்னுடைய எழுத்துக்களை நீங்கள் பொறுமையாக படித்து ஆலோசித்தால் உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணினேன்.
உங்களின் ஆலோசனைப்படி ......
சுதாகரனை தத்து எடுக்க வைத்தீர்கள்.
ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தீர்கள்.
இவைதானே பொது வாழ்வில் நியாயப் படுத்தப் பட முடியாத குற்றச்சாட்டுக்களுக்கும், பழிகளுக்கும், வழக்குகளுக்கும், தோல்விகளுக்கும் ஆரம்பமானது என்பதனை உங்களால் மறுக்க முடியுமா?. அல்லது
மறக்கத்தான் முடியுமா?.
முதன் முறையாக சிறை சென்றதன் பின்னணியும் இதுதானே?.
தோட்ட வேலை முதல் தொழில் நுட்ப வேலை வரை உங்கள் உறவினர்களைத்தானே திட்டமிட்டு சேர்த்தீர்கள்?.
கட்சியின் முக்கியமான பதவிகளுக்கு கூட உங்களுக்கு வேண்டிய ஆட்களைத்தானே திட்டமிட்டு பரிந்துரை செய்தீர்கள்?.
பணம் பெற்று பதவிகளும், சீட்கள் கொடுப்பதையும் உங்கள் உறவினர்கள் செய்ததால்தானே ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காரர்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களும் குற்றவாளி லிஸ்டில் உள்ளவர்களும் முன் நிறுத்தப்பட்டார்கள்.
இதனால் கட்சிக்கு பின்னடைவு வருகிறது என்பதை எப்போதாவது நீங்கள் உணர்ந்ததாவது உண்டா?.
கடைசியாக பரப்பன அக்ரஹார சிறை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பலவீனப் பட வைத்ததை உடன் இருந்த உங்களுக்கும் தெரிந்ததுதானே?.
தொண்டர்கள் தந்த தீராத உற்சாகம்தானே மீண்டும் அம்மாவை எழுந்து நிற்க வைத்தது!.
சரி....நடந்ததெல்லாம் போகட்டும்.
இப்போது நடந்தது என்ன?.
"எனக்கென குடும்பம் இல்லை" என்பதுதான் மாண்புமிகு அம்மா அவர்களால் ஓங்கி உரைக்கப்படும் குரல். அவருக்கு என தனியாக குடும்பம் இல்லை, அமைக்காததால். சொந்தம் பந்தம் உற்றார் உறவினர் சாதி சமூகம் அத்தனையும் உள்ளடக்கமாக உண்டு என்பதுதானே அதன் உள்ளார்ந்த அர்த்தம்?.
22/9/2016 அன்று அம்மா அவர்கள்......
தவறி தரையில் விழுந்து விட்டார்.
வழுக்கி பாத்ரூமில் விழுந்து விட்டார்.
டென்ஷனால் பிரஷர் ஏறி விட்டது.
மாத்திரையை மாற்றி சாப்பிட்டு விட்டார்.
மாத்திரை டோஸ் கூடி விட்டது.
ஸ்லீப்பிங் டோஸ் கூடி விட்டது.
வாக்குவாதத்தில் மயங்கி விட்டார்.
அல்லது.........
எதிர்பாராமல் இறந்தே போய் விட்டார் என்றே வைத்துக் கொள்வோம்.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?.
முதலுதவிகள் .......சிகிச்சைகள்.....
செய்திருப்பீர்கள்.
காரியம் கை மீறியிருந்தால்?
ஒரே ஒரு ஆள்....... ஒரே ஒரு ஆள்.......
முதல்வருக்கு பொதுவானவர்
அல்லது
நெருங்கிய ஒரு உறவினர்
முன்னிலையில் நீங்கள் நடந்து விட்ட உண்மையை உலகுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
செய்தீர்களா?...செய்தீர்களா?... இல்லை.
அல்லது நீங்கள் குறிப்பிட்டது போலவே நட்ட நடு இரவில் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தீர்கள்........
மறுநாள்......
நுரையீரல் பிரச்சினை சுவாசக் கோளாறு என வைத்துக் கொள்வோம்.
வெளியில் சொல்லாமல், யாரையும் பார்க்க விடாமல்
சிகிச்சைகள் நடைபெறுவதாக மக்களை தினம் தினம் துயர் கொள்ள செய்தீர்கள்.
ஆளுநர், எய்ம்ஸ் டாக்டர்கள், அமெரிக்க டாக்டர், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள்.......
ஆனால் ஒரே ஒரு ஆதாரம்....... போட்டோ ....வீடியோ...... Anyone ஏன் உங்களால் வெளியிட முடியவில்லை.
சரி...... அதுவும் போகட்டும்.....
வார்டு மாற்றி விட்டதாகவும்.......
நன்றாக இருப்பதாகவும்.....
எப்போது வேண்டுமானாலும்
வீட்டிற்கு போகலாம் என்றும்..........
அப்போலோ அறிக்கைகள்!
சரி....
அதுவும் உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்!
திடீர் ஹார்ட் அட்டாக்.......
EPMO கருவி பொருத்தல்!
அப்போது கூட ஒரே ஒரு போட்டோ கவர்னருடன் எடுத்து போட்டிருக்கலாமே!.
மக்கள் ஓட்டு போட்டு ஜெயித்த மாநில முதல்வர் அல்லவா அவர்!.
உங்கள் வீட்டு தொழுவத்தில் வளர்க்கும் மாட்டிற்கு கூட மறைத்து வைத்து சிகிச்சை கொடுக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமல்லவா?.
எத்தனை கோடி ஜனங்கள் புழுவாக துடித்தார்கள்!
உங்களுக்கு எல்லோரையும் போல் இதயம் உள்ளதா!
இல்லை கல்லாகத்தான் உள்ளதா?
இரத்த சொந்தம் தீபா வெளியே 75 நாட்களாக புலம்பி திரிந்ததே?.
அவர்களை பார்க்க நீங்கள் ஏன் அனுமதிக்கவில்லை?.
மூன்றாம் நபரான உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ அவரை தடுக்க என்ன உரிமை உள்ளது?
சரி.. அதுவும் போகட்டும்......
இத்தனை இரகசிய சிகிட்சைகளை செய்து உயிரோடு கொண்டாவது வந்தீர்களா?.
2 1/2 மாத கால மர்மங்களை உடைத்து உயிரோடு கொண்டு வந்திருந்தால் உங்களை மனுஷியல்ல தெய்வப் பிறவியாகவே மக்கள் பார்த்திருப்பார்கள்.
ஆனால்.......இப்போது ........ உங்களை
பெண்ணல்ல.பண வெறி பிடித்த பெரும் பேயாகவே பார்க்கிறார்கள்.
அத்தனை பேரின் இதயக் குமுறலின் சாபங்களும் கண்டிப்பாக தாக்கும் உங்களை என்றாகினும்...எங்கள் அம்மா துணை உடன்!.
தினம் தினம் வலம் வரும் செய்திகள் மூலம் வீட்டில் வைத்தே அம்மா திடீரென அம்மா இறந்து விட்டார்கள் என வைத்துக் கொள்வோம். உடனே சொல்லியிருந்தாலும் மக்களெல்லாம் அம்மா எப்படியோ இறந்து விட்டார்கள் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்து அடித்து புரண்டிருந்தாலும் சமாதானமாகி இருப்பானே?
செய்தீர்களா?.
ஆயுளுக்கும் அடிமட்ட தொண்டனின் அடி வயிறு குமுறல் உங்களை சும்மா விடுமா?.
மீடியாக்காரனை நிர்பந்தம் செய்து
அறிவிக்க வச்சதும் நீங்கதான்!.
மறுதலிக்க சொன்னதும் நீங்கதான்!.
தமிழ்நாட்டு மக்களெல்லாம் உங்களுக்கு
தஞ்சாவூர் பொம்மையா?.
சரி.......
உங்கள் அறிவிப்புபடி
11.30 மணிக்கு இறந்திருந்தால்
மறுநாள் 4.00 மணிக்கு அடக்கம் என்றால் எதற்கு எல்ப்பார்மிங்?.
இறந்து போனவர்களுக்கு மூக்கில் பஞ்சு வைப்பார்கள்.
ஏன் வைக்கவில்லை தோழி?.
இறந்து பலநாள் ஆகி பதப் படுத்திய உடலுக்கு பஞ்சு தேவைப்படாது. அப்படிதானே?.
சரி.......
அடுத்தது.........
அதிமுக பொதுசெயலாளரின் உடலின் அருகில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுக்கு இடம் இல்லை.
தமிழ்நாடு முதல்வரின் உடலின் அருகில் தமிழ்நாடு அமைச்சர்களுக்கும் இடமில்லை. சட்டசபை உறுப்பினர்களுக்கும் இடமில்லை.
முகத்தை கூட பார்க்க முடியாத அடிமட்ட தொண்டனுக்கு அடியும் உதையும்.
சுற்றிலும் அம்மா விலக்கி வைத்த குடும்ப சுற்றம் சூழல்!
பீரங்கி வண்டியிலும் அவர்களே.
மேடையிலேயே முதல்வராகவே ஆக விட்ட உங்கள் பாடிலேங்க்வேஜின் அப்பட்ட காட்சி.
ஒரு ட்ராமாவை மறைக்க எத்தனை எத்தனை ட்ராமாக்கள் நடத்தி உள்ளீர்கள்?.
சரி.....
அம்மாவின் விதி சதியால் வீழ்ந்து விட்டது என மனதை தேற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம்.
அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்?.
அம்மாவை விதைத்த மண்ணின் ஈரம் காயும் முன்னே உரிமை இல்லாமலேயே இறுதிக் கடன் செய்த நீங்கள் வீதி ஊர்வலம் வருகிறீர்கள்!.
அதே வீதிகளில் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள், மக்கள் மனங்களில் உங்கள் பிம்பம் எப்படி கேவலமாக இருக்கிறது என்று!
அம்மாவோடு வாழ்ந்த உங்களுக்கு,
அம்மா காட்டிய செஞ்சோற்று கடன் பட்ட அதே நன்றி உணர்வில் நானும் சொல்வது என்னவென்றால்........
அம்மா வளர்த்தெடுத்த கட்சியிலோ, ஆட்சியிலோ தற்போது நீங்கள் அங்கம் வகிக்க நினைக்கவே நினைக்காதீர்கள்.
அது தற்போது உங்களுக்கும் நற்பெயரை என்றும் தராது. கட்சிக்கும் வளர்ச்சியை தராது என்பதுதான் நிதர்சனம்.
மற்றும் நீங்கள் எப்படி சாந்து வைத்து பூச முனைந்தாலும்.........
அம்மாவின் மர்ம மரணத்தில் சட்டமோ, தார்மீகமோ
கேட்கும் கேட்விகளுக்கு உங்களுக்கு தகுந்த பதிலை சொல்லவே முடியாது......
மேலும் மேலும் குற்றக் கணைகள்தான் உங்கள் மேல்.
அம்மாவின் அணுக்க காரியதரிசியான உங்களிடம் ஒரு ஆலோசனை. வேண்டுகோளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கட்சியை கட்சிக்காரர்கள் தலைமை வகித்து பார்த்துக் கொள்ளட்டும்.
அரசை அமைச்சர்களும் அதிகாரிகளும் சட்டசபை உறுப்பினர்களும் பார்த்துக் கொள்ளட்டும்.
மக்களை மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
அம்மாவின் குடும்ப கடமைகளையும் உரிமைகளையும் அம்மாவின் உறவினர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
உங்கள் மேல் வழக்குகள் எல்லாம் கையில் விலங்குகளை வைத்து காத்துக் கொண்டிருக்கும் கர்ம வேளையில......
அம்மாவின் பெரும் செல்வத்தில் சட்டப்படி , நியாயப்படி அம்மாவின் உறவுகளுக்கு கொடுத்தது போக மீதியை அம்மா விரும்பும் விதத்தில் பொது நல டிரஸ்டை அமைத்து மக்கள் சேவைக்கு பயன் படுத்தி நீங்கள் அதை தொடர்ந்து நிர்வகியுங்கள்.
கட்சியிலும்
அரசியலிலும்
அம்மாவின் குடும்பங்களிலும் உங்கள் தலையீடுகள் இன்றி
விட்டு விடுதலையாகி
எஞ்சிய காலங்களை சாப விமோசன
பாப விமோசன காலங்களாக வாழ்ந்தால் உங்கள் வருங்காலம் சிறப்பாகும்.
கட்சிக்கும் சிறப்பாகும்.
உங்களுக்கும் சிறப்பாகும்.
எதையும் வலுக் கட்டாயமாக கைப்பற்ற நினைக்காதீர்கள்.
அம்மாவின் காரியதரிசி ரோல் அம்மாவோடு
உங்களுக்கு முடிந்து விட்டது.
நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்.
இல்லையேல் அம்மாவின் ஆவிக்கே உங்களால் பதில் சொல்ல இயலாது.
காத்திருந்து,திட்டம் தீட்டிய சதி உலக வரலாற்றில் எல்லா சதிகளையுமே மிஞ்சி விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...