Sunday, December 18, 2016

பண மதிப்பு நீக்கம்... எப்போது தீரும் பணத் தட்டுப்பாடு?

யர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன், ‘ஆஹா, அருமையான திட்டம். இனி கறுப்புப் பணமும் கள்ளப் பணமும் ஒழிந்துவிடும்’ என்று புகழாதவர்களே இல்லை. இந்தியா முழுக்க உள்ள மக்கள் இத்தனை ஆண்டு காலம் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை தானாக முன்வந்து வங்கியில் டெபாசிட் செய்தார்கள், செல்லாமல் போன பழைய பணத்துக்குப் பதிலாக புதிய பணம் விரைவிலேயே கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்.
ஆனால், பிரதமர் மோடி அறிவிப்பு வந்து ஏறக்குறைய 40 நாட்கள் முடிந்துவிட்டன. இந்த 40 நாட்களில்  அத்தியாவசிய செலவுக்குத் தேவையான பணம்கூட இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவது அதிகரிக்கவே செய்திருக்கிறது. ‘50 நாட்கள் பொறுமையாக இருங்கள். அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன்’ என்று சொன்னார் பிரதமர். ஆனால், இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், 100 நாட்கள் ஆனபின்னும் பழைய நிலைமை திரும்புமா, மக்களிடம் சரளமாக பணப் புழக்கம் ஏற்படுமா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே உள்ளது. 

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை கடந்த சில வாரங்களாக புகழ்ந்தே வந்த பலரும் கடந்த 40 நாட்களில் நடந்த சம்பவங்களைப் பார்த்தபின், விமர்சனக் குரல்களை எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த விமர்சனக் குரல்களில் நியாயம் இருக்கவே செய்கிறது.

ஆர்பிஐ எப்படி ஒப்புக் கொண்டது?

பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஆர்பிஐ-யின் பெயர் பாதிப்படைந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார் ஸ்டான்டர்ட் அண்ட்  பூவர் நிறுவனத்தின் இயக்குநர் கைரன் கர்ரி. ‘‘பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுக்கள் தரும் வேலை மிக மெதுவாக நடப்பதினால், பெரிய அளவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கமும் ஆர்பிஐ-யும் பல்வேறு திடீர் நடவடிக்கைகளை எடுத்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கையினால் ஆர்பிஐ-யின் திறமையும் தனித்துவமும் கேள்விக்கு உள்ளாகும் நிலை உருவாகி இருக்கிறது. நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதில் நம்பகமான நிறுவனம் என்றே நாங்கள் அதைக் கருதுகிறோம்!’’ என்று சொல்லி இருக்கிறார் அவர்.

வங்கிகளின் பெயரும் பாதிப்பு!


ரிசர்வ் வங்கி மட்டுமல்ல, பல வங்கிகளின் பெயரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் ‘டேமேஜ்’ ஆகியிருக்கிறது. ஆரம்பத்தில் கைவசம் இருந்த ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுக்களை தந்த வங்கிகள், பிற்பாடு ரூ.2,000 நோட்டை மட்டுமே தருவதை வழக்கமாக்கிக் கொண்டன. ரூ.2,000 நோட்டை வைத்துக்கொண்டு மக்கள் சில்லறை மாற்ற முடியாமல் தவிப்பது அன்றாடக் காட்சி களாகிவிட்டன. அந்தப் பணத்தைக்கூட ஏ.டி.எம்.களில் தினமும் ரூ.2,500, வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24,000 என்கிற அளவுக்கு மட்டுமே தந்தன. 

ஆனால், இதெல்லாம் பெரிய நகரங்களில்  மட்டும்தான். சிறிய நகரங்களில் வாரத்துக்கு ரூ.24,000 என்கிற நடைமுறையை எல்லாம் பெரும்பாலான வங்கிகள் பின்பற்றவே இல்லை. பல நாட்கள், ‘பணம் இல்லை’ என மக்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.4,000 மட்டுமே தந்ததால், வங்கிகள் முன்பு மக்கள் தினமும் காத்திருக்க வேண்டிய நிலையே  கடந்த ஒரு மாத காலமாக இருக்கிறது. வங்கிகள் இப்படி என்றால், பெருவாரியான ஏடிஎம்-கள் கடந்த ஒரு மாத காலமாக செயல்படவே இல்லை. நள்ளிரவில் ஏடிஎம்- களில் பணத்தை ‘லோட்’ செய்தாலும், அடுத்த சில மணி நேரங்களில் தீர்ந்துவிடுகிற அளவுக்கு மக்களிடம் பணத் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் வங்கிகள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியும் கோபமும் உருவாகி இருப்பதை மத்திய அரசு எப்படித்தான் நீக்கப் போகிறதோ?

கட்டுக் கட்டாக ரூ.2,000 நோட்டுகள்!

அரசின் அதிரடி நடவடிக்கையினால் மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே ஒழிய, பெரும் பணக்காரர்களுக்குத் தேவையான பணம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. வருமான வரித் துறைக்குப் பயந்து மக்கள், தங்களிடம் உள்ள பணத்தை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்து கொண்டிருக்க, பெரும் பணக்காரர்களோ வங்கிகளில் இருக்கும் சில ‘கறுப்பு ஆடுகளுக்கு’ கையூட்டு கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை வேண்டும் என்கிற அளவுக்கு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. 

சென்னையைச் சேர்ந்த சேகர் ரெட்டியிடம் ரூ.10 கோடி ரூபாய் அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளை எடுத்திருக்கிறார்கள். கர்நாடகாவிலும், கோவா விலும் பல கோடி ரூபாய் அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள். தனி மனிதராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், இவ்வளவு பணம்தான் எடுக்க முடியும் என்கிற போது சில தனிநபர்களிடம் மட்டும் இத்தனை கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள் எப்படி வந்தது? இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்திருக்க  மத்திய அரசிடமிருந்து சரியான பதில் இல்லை. இதுவரை சில ஊழியர்கள் தவறு செய்து, தப்பித் திருக்கலாம். ஆனால், இதேபோன்ற தவறுகள் வங்கிகளில் தொடர்ந்து நடந்தால், வங்கிகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும் என்பதை மத்திய அரசு ஏன் உணரவில்லை? 
கறுப்புப் பணம் எவ்வளவு?  

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வருபவர் விவேக் கெளல். ‘த விவேக் கெளல் லெட்டர்’ என்பதன் ஆசிரியராக இருக்கும் இவர், இந்தியப் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளைத் தொடர்ந்து செய்தித் தாள்களிலும் இணையத்திலும் எழுதி வருகிறார். பண மதிப்பு நீக்கம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து இவர் முன்வைக்கும் விமர்சனங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருக்கின்றன. அவரது விமர்சனத்தைப் பார்ப்போம்.

‘‘பண மதிப்பு நீக்கத்துக்குப் பின் எவ்வளவு கறுப்புப் பணம் இந்தியாவில் பணமாக உள்ளது என்பது முக்கியமான கேள்வி. கடந்த 2012 மே மாத நிலவரப்படி, நிதி அமைச்சகம் கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றியவை குறித்த தகவல் வெளியிடப்பட்டது. 

வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் காட்டாத வருமானத்தில் பணத்தின் மதிப்பு மிகவும் சிறிய அளவே ஆகும். உதாரணத்துக்கு,  2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.9,289.43 கோடி கணக்கில் காட்டாத வருமானத்தில், வெறும் ரூ.499.91 கோடி மட்டுமே பணமாக பறிமுதல் செய்யப்பட்டது. மீதி கறுப்புப் பணம் தங்க நகைகளாகவும், பிற சொத்துகளாகவுமே பறிமுதல் செய்யப்பட்டன.  

2006 - 07 முதல் 2011 - 12 வரையிலான ஆறு நிதி ஆண்டுகளில் 24,000 முறை வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. சோதனையில், ரூ.40,426.47 கோடி அளவுக்கு கணக்கில் வராத  பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், இதில் வெறும் 4.9% மட்டுமே பணமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஒரு சில நிதி ஆண்டுகளில் 3.7% முதல் 7.4% வரை வேறுபட்டுள்ளதே தவிர, பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தத் தகவல்கள் சொல்லும் உண்மை என்னவெனில், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குக் கையில் பணமாக வைத்திருப்பதைவிட வேறு பல நல்ல வழிகள் இருக்கின்றன என்பதே. 

அடுத்த முக்கியமான கேள்வி, இந்தியாவில் கறுப்புப் பணம் மொத்தம் எவ்வளவு உள்ளது என்பது. தேசிய பொது நிதி நிறுவனம் மற்றும் கொள்கை (NIPFP) என்னும் நிறுவனம் கறுப்புப் பணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை  1985-ல் வெளியிட்டது. அதில் 1975-76-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கறுப்புப் பணத்தின் அளவு 15 முதல் 18% வரை இருக்கும் என்றும், 1983-84-ல் 19 முதல் 21% வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது.  

ஆனால், 1999 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலத்தில், கறுப்புப் பணம் குறித்த மதிப்பீட்டினை உலக வங்கி 2010-ல் வெளியிட்டது. உலக வங்கி மதிப்பீட்டின்படி, 1999-ல் இந்தியாவில் கறுப்புப் பணம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.7 சதவிகிதமாக இருந்தது. இது 2007-ல் 23.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் இந்தியாவில் கறுப்புப் பணம், ஐந்தில் ஒரு பங்கு உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
2015-16ம் நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.135.76 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஒட்டுமொத்த கறுப்புப் பணம் ரூ.27.15 லட்சம் கோடி அளவுக்கு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் ஒட்டு மொத்த கறுப்புப் பணத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது பணமாகக் கைப்பற்றப்பட்டது வெறும் 4.9% மட்டுமே என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கணக்கின்படி, ரூ.27.15 லட்சம் கோடியில் 4.9% எனில், ரூ.1.33 லட்சம் கோடி மட்டுமே இந்தியாவில் கறுப்பு பணம், பதுக்கல் காரர்களிடம் பணமாக உள்ளது. 

இப்போது கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர் களிடம் வரி விதிப்பதன் மூலம் 50% பணத்தைக் கைப்பற்றினால்கூட ரூ.66,000 கோடி மட்டுமே அரசுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், பண மதிப்பு நீக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு சுமார் ரூ.1.28 லட்சம் கோடி. இதை எல்லாம் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே தேவைதானா என்கிற கேள்வி எழவே செய்கிறது’’ என்று சொல்லி இருக்கிறார். 

கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்கிற பிரதமர் மோடியின் நோக்கம் சரியானதாகவே இருக்கலாம். அதற்காக அப்பாவி மக்கள் எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து கஷ்டப்பட முடியும்? பணத் தட்டுப்பாடு என்றைக்குத்தான் ஒழியும்? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...