Wednesday, December 21, 2016

உணர்வின் உச்சத்தைத் தொடும் இடம் இதுதான்.

என்னில் ஏதோ செய்தது இந்த பாட்டு. ஏன் இந்த இசைமட்டும் என் மனதை கிரங்க வைக்கிறது.

சின்ன சின்ன விஷயமாக ஆராய்வோமே என்று இந்தப் பாடலை என் ஹெட்ஃபோன் போட்டுக்கொண்டு கேட்களானேன்:

பாடல்: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்
பாடல்வரிகள்: வாலி

ஜேசுதாஸ் அவர்களின் அழகான பேஸ் வாய்சில் மட்டும் ஆரம்பிக்கும், பல்லவியின் முதல் வரி,
'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா' என்று...
எந்தவித தாள சப்தமும் இல்லாமலேயே ஜேசுதாஸ் பாடுவார்.

இதை சீரோ(zero) பொசிஷன் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு உணர்வை நன்கு உணரவைப்பதற்கு அதன் அடித்தளத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்லவேண்டும் என்பதன் மனோதத்துவம் அறிந்தவராய் தன் இசையின் அமைப்பை இவ்வாறாக தனித்தன்மை கொண்டதாய் அமைத்துக் கொண்டிருப்பதாலேயே ராஜாசாரால் இத்தனை ஆயிரம் பாடல்களை வெவ்வேறு மெட்டுக்களாய் வெவ்வேறு உணர்வுகளுடன் அனைவரும் விரும்பும் வண்ணம் கொடுக்க முடிகிறதோ என்று இந்த இடத்தில் எனக்கு யோசிக்கத் தோன்றியது.

பாட்டுக்கு வருவோம்...
அவர் முதல் வரியை முடிக்கும்போது இரண்டு ஒலிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். ஒன்று சலங்கை ஒலி
'சக் சக் சக்..' என்று
அதனுடன் மற்றொன்று சாதாரண மரப்பெட்டியில் தட்டும் தாளம்
'தக் தக் ததக்..' என்று.
இவ்விரு தாளங்களுடன் மட்டுமே ஒலிக்க மீண்டும் பல்லவியின் முதல் வரியுடன் தொடர்ந்து தன் வசீகரக் குரலில் அனுபல்லவியையும் பாடி முடித்து மீண்டும் பல்லவியை பாடி முடிக்குமிடத்தில்,
'இடையிசை'யாக (interlude) புல்லாங்குழல் மிக அழகாக அதன் இசையைத் தொடங்கும். தொடங்கிய சிறிது நேரத்தில் பேஸ் கிடாரும், க்ளாசிகல் கிட்டாரும் கலந்து ஒரு பேரின்ப அதிர்வு அலையை உண்டாக்கும் பாருங்கள் ஐயோ ராஜாசார் 'உம்ம்மா'.
ஆக சலங்கை, மரப்பெட்டி தாளம், புல்லாங்குழல், பேஸ் கிடார், க்ளாசிகல்கிடார் எல்லாம் ஒன்றுசேர்ந்து கலக்கிக்கொண்டு முடியும் தருவாயில் பேஸ்கிடார் மட்டும் சிறு இடைவெளியில் இசைக்கும்
அப்போதே அதனுடன் கலப்பது வயலின்களின் தொகுப்பிசையும் உடனே கீபோர்ட் இசையும் ஒட்டிக்கொள்ளும் அதே தாள ஒலிகளுடன். அங்கே இசையின் கொள்ளையழகு ரம்மியமாகக் கேட்கும்.

இந்த இடத்தில் ராஜாசார் பல்லவி முடிந்து முதல் சரணத்தைத் தொடங்கப்போகும் சந்திப்பு. மனோதத்துவ அடிப்படையில் நம் உணர்வை வேறொரு கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அவர் மிக அழகாக இதைச் செய்யும் வித்தையைக் காண்போம்..

இதுவரை இசைத்துக்கொண்டு வந்த இசைக்கருவிகளில் இரண்டை இங்கே ஒதுக்கிவிடுகிறார். அந்த சலங்கையையும் மரத் தாளப்பெட்டியையும்தான். அதாவது முதலாவது இடையிசையின் முடிவில் பேஸ் கிடார் மட்டும் சிறு இடைவெளியில் ஒலிக்கவிட்டு பேஸ் ஒலி அதிகம்கொண்டு தபலாக்களின் தாளத்தை மிகச்சரியாக முதல் சரணத்தின் முதல்வரியை ஜேசுதாஸ் ஆரம்பிப்பார்,
'ஆறாத ஆசைகள் தோன்றும்
என்னை தூண்டும்' என்று.
அப்பப்பா, உணர்வின் உச்சத்தைத் தொடும் இடம் இதுதான்.
இந்த தெய்வீக மெட்டு இவருக்கு மட்டும் எப்படி வந்து விழுகிறது என்றெண்ணி ராஜாசாரை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கத் தோன்றும்.

ஜேசுதாஸ் குரலோடு தபலா, பேஸ்கிடார், க்ளாசிகள் கிடார், எலக்ட்ரிக் அக்குஸ்டிக் கிடார், கீபோர்ட் என்று ஒரே மூச்சில் இவை அத்தனை இசைக்கருவிகளும் இசைக்க, பாட்டின் தரம் எங்கோ போய்விடும்.

Image may contain: 2 people, text

இப்படியாக படிப்படியாக நம் உணர்வை அடிமட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தன் இசையால் நாம் அடையும் வித்தையைக் கற்றறிந்தவர் நம் ராஜாசார்.

அதற்காக அத்தனை இசைக்கருவிகட்கும் எத்தனை யுக்திகளைக் கையாள வேண்டியுள்ளது.

அது தவிர ஒவ்வொரு பாடலுக்கான வெவ்வேறு மெட்டுகளுக்காக அவர் எவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கும் என்று நினைக்கும்போது, மனம் வியப்பில் ஆழ்கிறது.

ஒரு சராசரி இசையமைப்பாளரால் இது சத்தியமாக சாத்தியப்படாது.

நம் ராஜாசார் அதிசயப்பிறவியே.
நல்ல இசையைப் படைப்பதற்காகவே பிறந்தவர்.


அதிசயத்திலிருந்து மீளாத 
இளையராஜா ரசிகன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...