Tuesday, January 31, 2017

இசைப் பெரியவர்.............

நம் இசைஞானியின் பல பாடல்கள் உயிர்பெற்ற இடம், வடபழனி பிரசாத் ஸ்டூடியோ. அதன் முதன்மை ஒலிப்பதிவாளர், பேராசிரியர் பி. தென்னரசு, இசைஞானியுடனான தன் நினைவுப் பக்கங்களை நமக்காகப் புரட்டினார்!
‘‘நான் ராஜா சாரோட கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல வொர்க் பண்ணியிருக்கேன். இன்னைக்கு உங்க முன்னால உட்கார்ந்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு இசைஞானிதான் காரணம். காஞ்சிப் பெரியவரை ஆன்மிகப் பெரியவர்னு சொல்றது மாதிரி, இளையராஜா அவர்களை இசைப் பெரியவர்னுதான் நான் சொல்வேன். அவர் இசைஞானி மட்டுமல்ல, இசை மகான்!
80களின் தொடக்கம் முதல் 90களின் இறுதிவரை வந்த அற்புதமான பல பாடல்களின் உருவாக்கத்தின்போது ராஜா சார்கூட நான் பணிபுரிந்திருக்கேன். அந்நாட்களில் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் அவர் வேலை செய்துட்டு இருப்பார். தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க இசை குறித்த சிந்தனையிலேயே இருப்பார். அப்போவெல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு பாடல்கள் வீதம் வேலை நடக்கும். காலை 7 மணி முதல் 1 மணி வரை ஒரு கால்ஷீட். பிறகு 2 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு கால்ஷீட்னு பாடல் பதிவு போயிட்டு இருக்கும்.
காலையில மணி 7.30ஐ தொடும்போது பளீர் என்ற வெள்ளுடையில் மெதுவா அரங்கத்துக்குள் நுழைவார் இசைஞானி. அந்த நிமிஷம் மொத்த அரங்கமும் இறைவனின் ஆலயம்போல பேரமைதியாய் இருக்கும். அரங்கத்தின் மையத்துக்கு வந்ததும், ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்து தயாரா இருக்கும் கலைஞர்களிடம் வாசிக்கச்சொல்லிக் கேட்பார். அதில் சின்னச் சின்ன திருத்தங்கள் இருந்தா சொல்லுவார். ஆனா, நொட்டேஷனில் எந்தத் திருத்தமும் இருக்காது. அது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்ட் மாதிரிதான்.
பாடல் பதிவு தொடங்குறதுக்கு முன் ஒன்றுவிடாமல் அத்தனை இன்ஸ்ட்ருமென்ட்களையும் செக் பண்ணுவாராம் இசைஞானி. இன்னைக்கு இருக்கிற மாதிரி அப்போ டிஜிட்டல் கருவிகள் கிடையாது. அனலாக் 8 அல்லது 16 ட்ராக்கில்தான் பாடல்கள் பதிவுசெய்யப்படும். மதியம் 1.30 மணியளவில் முழுப் பாடலையும் போட்டு கேட்டுவிட்டு திருப்தியானதும், ஒரு குழந்தையை ஈன்றெடுத்த தாயின் புன்னகை அவர் முகத்தில் வரும்.
பிறகு மதிய உணவு இடைவேளை முடித்து 20 நிமிடத்தில் திரும்பும் ராஜா சாரின் கையில், அடுத்த பாடலுக்கான நொட்டேஷன்ஸ் இருக்கும். கூடவே காலையில் இருந்த அதே முழு எனர்ஜியும் இருக்கும். அவ்வளவு இன்வால்வ்மென்ட் அவருக்கு தன் வேலைமீது. முதல் பாடலில் காட்டிய அதே நுணுக்கமான அக்கறை, சமரசம் இல்லாமல் அப்படியே இரண்டாவது பாடல் மீதும் இருக்கும். வித்தியாசமான, புதுமையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துவார். உதாரணமாக ‘துந்தனா’ என்ற கருவியைப் பயன்படுத்துவார். பெரும்பாலும் எல்லா பாடல்களிலும் பேஸ் கிட்டார் பயன்படுத்தியிருப்பார்!’’
Image may contain: 1 person, closeup
இசைஞானியின் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
‘‘அவருடைய மேக்கிங்கில் எனக்கு மிக மிக பிடித்த பாடல், BBC நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல், தளபதி படத்தின் ‘ராக்கம்மா கையை தட்டு’ பாடல். பெரிதாக டெக்னாலஜி இல்லாத அந்நாளில், சாதாரணமா 8 ட்ராக் ஆம்பெக்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட பாடல் அது!’’
இந்தியாவின் பல முன்னணி இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்திருக்கிறீர்கள். இசைஞானியின் பின்னணி இசைகோர்ப்பு பாணியைப் பற்றி நீங்கள் வியக்கும் விஷயங்கள் என்ன?
Image may contain: 1 person, sitting
‘‘ஒரு படத்தை ஒரே ஒருமுறை பார்ப்பார். உடனடியா அவர் மூளைக்குள் எந்த இடத்துக்கு என்ன மாதிரியான பின்னணி தேவை என்ற ஐடியா கிடைச்சிடும். உடனே ஸ்டூடியோ வந்து படத்தை ஓடவிட்டு நொட்டேஷன்ஸை எழுத ஆரம்பிச்சிடுவார். அத்தனை துரிதமும், அதேசமயம் அதில் துல்லியமும் படத்தை பார்த்த ஒரே பார்வையில் கொண்டு வரும் இசையமைப்பாளர் அவரைத் தவிர நம்மிடம் வேறு யாரும் இல்லை!
ஆரம்பத்தில் இசையை ரசிக்க மட்டுமே தெரியும் எனக்கு. சவுண்ட் டெக்னாலஜியை எனக்கு நான் படிச்ச இன்ஸ்டிட்யூட் கற்றுக்கொடுத்தது. ஆனா இசை குறித்த பல நுணுக்கங்களை ராஜா சார்கிட்டதான் கத்துக்கிட்டேன். இசைஞானியோடு நான் இணைந்த பிறகு, அவரிடம் இருந்துதான் பீட், டெம்போ போன்ற நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஓர் ஆசானா, எனக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் பொறுமையா சொல்லித் தருவார். இன்னைக்கு நான் இந்த பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு புரொஃபசரா இருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்!’’
- முதன்மை ஒலிப்பதிவாளர், பேராசிரியர் பி. தென்னரசு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...