Sunday, December 14, 2014

கழக நிலைப்பாடு படும் பாடு

வரும்  தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவை அறிவிக்கும் வரை நாம் ஏன் சஸ்பென்ஸில் காத்திருக்க வேண்டும்? தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே! – சத்யா
*
karunanidhi-2hindu
கலைஞர்:
எல்லோரும் வந்தாச்சா? விவாதத்தை ஆரம்பிக்கலாமா? கழகம் எப்போதுமே ஜனநாயக ரீதியிலே நடக்கிற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தல்லே எந்தக் கட்சியோடு கூட்டு வெச்சுக்கலாமுன்னு உங்க கருத்துக்களை மனம் திறந்து சொல்லலாம். அப்புறம், குடும்ப உடன்பிறப்புகளோட கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கிறேன்.
மாவட்டச் செயலாளர்:
காங்கிரஸோட கூட்டு வெச்சுத்தான் தலைவரே நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. சட்ட சபைத் தேர்தலிலே, நாம கொடுக்காமலேயே 63 இடங்களை எடுத்துக்கிட்டு, நம்மை மைனாரிட்டி எதிர்க் கட்சியா ஆக்கினதே காங்கிரஸ்தான். மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, 28 எம்.பி. ஸீட் எடுத்துக்கிட்டு ஒண்ணோ ரெண்டோதான் ஜெய்ப்பாங்க. காங்கிரஸை நாம் ஏற்கனவே கழட்டி விடாம இருந்தா, இப்ப கழட்டி விட்டுடறது நல்லதுங்க.
துரைமுருகன்:
கழட்டி விட்டா என்ன ஆகும்னு யோசிக்கணும். 2ஜி கேஸ்லே ஸி.பி.ஐ.க்கு சுதந்திரம் கிடைச்சுடாதா? தலைவர் நிம்மதியா கட்சி நடத்த வேண்டாமா? கனிமொழியைக் காப்பத்தறது முக்கியமா? கழகத்தைக் காப்பாத்தறது முக்கியமா? எனக்கென்னவோ, காங்கிரஸோட கூட்டு சேர்ந்தா வர்ற கெடுதலை விட, கூட்டு சேரலைன்னா வர்ற கெடுதல்தான் அதிகம்னு தோணுது.
மா.செ:
அதில்லைங்க, எப்படியாவது விஜயகாந்தை இழுத்துட்டா நல்லது. கழகம் வலுவோட இருந்தாத்தான் 2016-லே மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சு, எவ்வளவோ செய்யலாம். முன்னாள் மந்திரிகளை சொத்துக் குவிப்பு வழக்கிலேர்ந்து காப்பாத்த முடியும். கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி எவ்வளவு நாளாச்சு!
ஸ்டாலின்:
விஜயகாந்தை நாம கூப்பிட்டா அவர் கேக்கிற ஸீட் குடுக்கணும். அவரே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். இன்னும் டைம் இருக்குது. வேணும்னா கடைசி நேரத்திலே முயற்சி செஞ்சு பாக்கலாம்.
தயாநிதி மாறன்:
நம்ம கெட்ட நேரம் திடீர்னு விஜயகாந்தும் அம்மையாரும் சேர்ந்துட்டா, அந்தக் கூட்டணி பலமாயிடும். அதனாலே விஜயகாந்தையும் விட்டுடாம காங்கிரஸையும் சேர்த்துக்கிட்டு கூட்டணி அமைக்கலாம். அவங்களுக்கு ஒதுக்கினது போக மீதி ஏதாவது தொகுதி இருந்தா அதுலே போட்டி போடலாம். 2ஜி கேஸ் இதே மாதிரி நல்லபடியா போகும், நீரா_ராடியா டேப்பை ஸி.பி.ஐ. ஆராயாது. இவ்வளவு நன்மை இருக்குது.
கலைஞர்:
அதுக்காக? சுயமரியாதையை இழக்க நான் தயாராக இல்லை. இந்த மத்திய அரசாலே இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. கழகத்தின் உணர்வுகளை மதிக்காம, காமன்வெல்த் மாநாட்டுலே கலந்துக்க பிரதமரே இலங்கை போறார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. நாளைக்கே டெஸோ கூட்டம் கூட்டறேன்.
தயாநிதி மாறன்:
(செல்ஃபோனை நீட்டியபடி) தாத்தா… டெல்லியிலேர்ந்து பேசறாங்க. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்திலே ஸி.பி.ஐ. குற்றப் பத்திரிகை ரெடி பண்ணியிருக்குதாம். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறாங்க.
கலைஞர்:
வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையிலே இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா நான் எப்பவும் செயல்படமாட்டேன். நாம காங்கிரஸுக்கு எதிரா முடிவெடுத்தா மட்டும் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துடுமா? தனி ஈழம் கிடைச்சுடுமா? மீனவர்களை யாரும் கடத்த மாட்டாங்களா?
தயாநிதி மாறன்:
ஹலோ… கலைஞர் சொன்னதைக் கேட்டுகிட்டீங்களா? அதாங்க கழக நிலைப்பாடு. ஆவேசமா விவாதிச்சாலும், கடைசியிலே ஃபார்முக்கு வந்திடுவோம்.
மா.செ:
காங்கிரஸுக்கு எப்பவும் விஜயகாந்த் மேலே அக்கறை அதிகம். அவங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு, கழகத்தை தனிமைப்படுத்திட்டா, கழகம் மூணாவது இடத்துக்குப் போனாலும் போயிடும். அதைத் தடுக்கணும். விஜயகாந்த் கேக்கிற ஸீட்டைக் குடுத்து அவரை நம்ம பக்கம் இழுத்துடுவோம். அப்பதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்.
ஸ்டாலின்:
விஜயகாந்துக்கு அதிக ஸீட் குடுத்தா, எதிர்காலத்திலே எனக்கு அவரே போட்டியா வந்துடுவாரு. எப்படியும் அம்மையார் அணியிலே இடம் கிடைக்காம கம்யூனிஸ்ட்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்புறம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவாங்க. 12 ஸீட்டை ஒத்துமையா பிரிச்சுக்குங்கன்னு சொல்லிடலாம்.
மா.செ:
சமயத்திலே அ.தி.மு.க.வும் காங்கிரஸும் கூட கூட்டு சேர்ந்துடலாம். அதிகார பலத்திலே அவங்க ஜெயிக்க முடியும். மத்தியிலே காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டு வெச்சா, பா.ஜ.க. தலைவர்கள் விஜயகாந்தையும் நம்ம பக்கம் இழுத்துட்டு வந்துருவாங்க. அப்ப நம்ம அணிதான் ஸ்டிராங்கா இருக்கும்.
கலைஞர்:
கூட்டணி தொடர்பான என்னுடைய பல கருத்துகளிலே அதுவும் ஒன்று. கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் இருக்காதுன்னு ஸி.எஸ்.ஸே. சொல்லியிருக்கார். மோடிக்கு எதிரா அமெரிக்காவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியதைக் கண்டிச்சவனே நான்தான். நமது தொப்புள்கொடி தமிழினத்தை திட்டமிட்டு அழித்த ரத்த வெறி ராஜபக்‌‌ஷேவுக்கு துணை போன காங்கிரஸுக்கு, இன்னும் எத்தனை காலத்துக்கு நாம லாலி பாடிக்கொண்டிருக்க முடியும்? நான் காரணமில்லாம டெஸோவை ரெண்டாவது தடவை உருவாக்கலை….
துரைமுருகன்:
(செல்ஃபோனில்) ஹலோ… அமலாக்கப் பிரிவிலேர்ந்து பேசறீங்களா?… அப்படியா? ஐயையோ! ஒரு நிமிஷம்… தலைவர் கிடே குடுக்கிறேன். கலைஞரே! டெல்லியிலியிலேர்ந்து ஃபோன், கனிமொழிக்கு எதிரா அமலாக்கப் பிரிவு ஏதோ புதுசா வழக்கு போடப் போகுதாம். கூட்டணி விஷயமா என்ன முடிவெடுத்தீங்கன்னு கேக்கிறாங்க.
கலைஞர்:
நான் அவசரப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கத் தயாராயில்லை. மதவாத ஆக்டோபஸ் ஆட்சி இந்தியாவில் எந்த விதத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு மசூதி இடிக்கப்பட்டபோதே சபதம் எடுத்திருக்கோம். மதவாத பா.ஜ.க.வை விரட்டியடிக்க காங்கிரஸை விட்டால் வேறு என்ன இருக்கிறது?
துரைமுருகன்:
அப்ப சரிங்க… அப்படியே சொல்லிடறேன். ஹலோ… ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கூட்டணி தர்மப்படியே நடக்கலாம். முகுல்வாஸ்னிக்கை அனுப்புங்க. பேசித் தீர்த்துக்கலாம்.
மா.செ:
காங்கிரஸோட சேர்ந்தாலே நமக்கு ரொம்ப கெட்ட பேருங்க. மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, தமிழ் உணர்வாளர்கள் ஓட்டெல்லாம் அம்மையார் பக்கம் போயிடும். மீனவர் கடத்தல் நடக்கும் போதெல்லாம் நம்மைத்தான் திட்டுவாங்க. ராஜபக்‌‌ஷே பண்ற கொடுமைக்கெல்லாம் நாமதான் பதில் சொல்லணும்.
மா.செ:ஆமாங்க. இலங்கைப் பிரச்னையிலே நாம வீரமா கேக்கறதுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்குது. காங்கிரஸோட சேர்ந்துட்டா, சொல்றதுக்கு ஒரு பதில் கூட இல்லை.
மா.செ: அப்படியும், காங்கிரஸோட கூட்டு சேர்றதா இருந்தா, ‘அடுத்த சட்டசபைத் தேர்தல்லே கழகத்தை கழட்டி விட்டுடணும்’னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கறது நல்லதுங்க. காலாகாலத்திலே நமக்கு காங்கிரஸ் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா, சுதந்திரமா கழகத்தை வளர்க்கலாம்.
துரைமுருகன்:
கழகத்தை வளர்க்க இப்ப என்ன அவசரம்? மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா? சுவர் இருந்தாதான் சித்திரம். தலைவர் குடும்பத்திலே பிரச்னை இல்லாம இருந்தாத்தான் எதிர்காலத்திலேயாவது அவராலே கழகத்தைக் காப்பாத்த முடியும்.
ஸ்டாலின்:
ஊழல்களால் காங்கிரஸ் பேர் ரொம்பக் கெட்டுப் போயிருக்குது. அவங்களோட சேர்ந்து தேர்தலை சந்திச்சா, ஊழல் கட்சிகள் ஒண்ணா சேர்ந்துட்டதா கிண்டல் பண்ணுவாங்க. காங்கிரஸை எதிர்த்தா, ஊழலை எதிர்க்கிறோம்ன்ற பேர் நமக்கே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டு வேண்டவே வேண்டாம். கலைஞர் முடிவை ஏத்துக்கறேன்.
கலைஞர்:
தம்பி ஸ்டாலின் கருத்துதான் என் கருத்தும். சோனியாவின் மருமகனும் உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படறாங்க. அவுங்களுக்கு ஒரு நீதி. கழகத்துக்கு ஒரு நீதியா? அதனால்தான் இலங்கைப் பிரச்னையிலேயும், சேது திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்.
தயாநிதி மாறன்:
மறுபடியும் டெல்லியிலேந்து ஃபோன்.
கலைஞர்:
அதுக்குள்ளே ஏன் அவசரப்படறாங்க? நாமதான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலையே….
தயாநிதி மாறன்:
அழகிரியின் உரத்துறையிலே ஊழல்ன்னு பா.ஜ.க. பிரச்னை கிளப்புதாம். ஸி.பி.ஐ. விசாரணை வெக்கணுமுன்னு கேக்கறாங்களாம். கூட்டணி விசயமா இன்னுமா முடிவெடுக்கலைன்னு கேக்கிறாங்க. என்ன பதில் சொல்றது?
கலைஞர்:
காங்கிரஸ் உடனான உறவில், கழகத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு சொல்லிடுவோம். அப்பத்தான் நாம காங்கிரஸை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமான்னு யாருக்கும் புரியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...