Tuesday, December 9, 2014

Snap Deal ஆ Snap the Deal ஆ?

கடைகளுக்குப் போய் நமக்குத் தேவையானவைகளை வாங்கிய 
காலம் போய், இருந்த இடத்திலிருந்தே நமக்கு பிடித்தவைகளை இணையத்தின் மூலம் கடன் அட்டை (Credit Card) அல்லது 
இணைய வங்கி (Net Banking) மூலமோ பணத்தை செலுத்தி 
வீட்டிற்கே பொருட்களை பெறும் காலம் இது. சில வேளைகளில் 
முன் பணம் செலுத்தாமல் வீட்டிற்கு பொருட்களை 
தூதஞ்சல்(Courier) மூலம் பெறும்போது பணத்தை செலுத்தும்
வசதியையும்  சில மின் வணிகம் நடத்தும் 
நிறுவனங்கள் அனுமதிப்பதுண்டு. 



இன்றைக்கு நம் நாட்டில் 350 க்கு மேற்பட்ட மின் வணிக 
நிறுவனங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 
இவைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக்காட்டாக புத்தகங்கள்,கைப்பேசிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், 
பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் 
போன்றவைகளை மட்டுமே விற்பனை செய்கின்றன. ஆனால் 
இந்த வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில நிறுவனங்கள் 
எல்லா பொருட்களையுமே விற்பனை செய்கின்றன.

அநேக நுகர்வோருடைய  கவனம் இந்த வகை வணிகத்தின் 
மேல் திரும்பியதன் காரணம் வீட்டிலிருந்தே வேண்டியதைப் 
பெறலாம் என்பதும் சந்தை விலையை விட பொருட்கள் 
விலை குறைவாக இருப்பது தான்.

Amazon, ebay, FirstCry, Flipcart, Gadgets Guru, 
Indiatimes Shopping, Jabang, Myntra,Naaptol, Snapdeal, போன்ற 
நிறுவனங்கள் நம்மில் பலருக்கு தெரிந்த நிறுவனங்கள். 
ஆனால் இது போன்ற மின் வணிக நிறுவனங்கள் 
இம்முறையில் வணிகம் நடத்த அரசு ஏதேனும் கட்டுப்பாடுகள்/விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறதா 
எனத் தெரியவில்லை. அப்படி ஏதும் இல்லாவிடில் உடனே 
அவைகளை உண்டாக்க அரசு முயலவேண்டும்.

ஏனெனில் Gartner இன் சமீபத்திய அறிக்கையின்படி பசிபிக் 
ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் மின் வணிகம் 
ஆண்டிற்கு 60 லிருந்து 70 விழுக்காடு அதிகரித்து 
அதி விரைவாக வளர்ந்து வருவதாகவும், 2015 இல் இந்த 
வணிகம் ரூபாய் 600 கோடிகளை எட்டும் எனத் தெரிகிறது. 
சரியான விதி முறைகள் இல்லாவிடில் நுகர்வோர்களாகிய
நாம் ஏமாற்றப்படும் வாய்ப்புகளும் வரலாம்.

நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனமான Flipcart, 
சென்ற அக்டோபர் ஆம் நாளை ‘The Billion Day’ என 
அறிவித்து  அன்று வாங்கும் பொருட்களின் விலையில் 
மிகப்பெரிய தள்ளுபடி தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தது. 
அதை நம்பி காலையிலேயே கணினி முன் அமர்ந்து 
பொருட்கள் வாங்க முனைந்தோருக்கு அறிவிக்கப்பட்ட 
நேரத்திலேயே அவைகள் விற்கப்பட்டதாக அறிவித்ததும், 
அநேகம் பேருக்கு அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தில் 
ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் காரணமாக  பொருட்கள் 
வாங்க முடியாமல் போனதும் அந்த விற்பனை வெறும் 
விளம்பரத்திற்கு தானோ என எண்ணவைத்தது.

அதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டும் கூட சிலர் 
அந்த நிகழ்வை மோசடி வேலை என்று கூட சாடினர். 
வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சரான 
திருமதி திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கூட அந்த 
நிகழ்வு பற்றி சொல்லும்போது , Flipcart இன் அந்த செயல் 
பற்றி அரசுக்கும் தகவல் வந்திருப்பதாகவும், அது பற்றி 
கவனிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிறுவனங்கள் எப்படி நுகர்வோரை அலைக்கழித்து தொல்லைப்படுத்துகின்றனர் என்பதை என் ன்ர் மகளுக்கு ஏற்பட்ட 
அனுபவம் மூலம் நேரடியாக தெரிந்துகொண்டேன். 

Snapdeal நிறுவனம் வெளியிட்டிருந்த விலைப் பட்டியலைப் 
பார்த்து எனது மகள் அக்டோபர் 27 ஆம் நாள் ஒரு 
கைப்பையை வாங்க இணையம் மூலம் பதிவு செய்தார். 
அந்த கைப்பையின் விலை ரூ.1121 என்றும் தள்ளுபடி போக 
நிகர விலை ரூ.588 என்றும் இருந்தது.

பதிவு செய்த சிறிது நேரத்திலேயே அந்த பையை 
வாங்கியதற்கு மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசியில் 
குறுஞ்செய்தி மூலமாகவும் Snapdeal நன்றி தெரிவித்திருந்தது. 
மேலும் அந்த கைப்பை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் 
அனுப்பப்படும் என்றும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் வீட்டில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அக்டோபர் 29 ஆம் தேதி என ன்ர் மகள் வாங்கிய கைப்பை
‘DELHIVERY’ என்ற தூதஞ்சல்(Courier) நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அந்த கைப்பை என் மகளுக்கு 
நவம்பர் 5 ஆம் தேதிக்கு முன்பே வந்தடைந்துவிடும் என்று 
குறுஞ்செய்தி வந்தது. அதில் அந்த தூதஞ்சல் நிறுவனத்தின் 
தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் சொன்னபடி நவம்பர் 5 ஆம் தேதி அந்த பை வந்து 
சேரவில்லை. நவம்பர் ஆம் தேதி ரூ 588 ஐ 
தயாராக வைத்திருக்கும்படியும் அன்று ‘DELHIVERY’  
நிறுவனம் அந்த கைப்பையை ஒப்படைக்கும் என்ற 
குறுஞ்செய்தி வந்தது. அதுபோல் அன்று அந்த கைப்பை 
வந்து சேர்ந்தது. பணத்தையும் கொடுத்துவிட்டோம். .  

ஆனால் அந்த கைப்பையில் இருந்த பற்பிணை (Zip) 
சரியாக இல்லாததால் உடனே கைப்பேசியில் கூப்பிட்டு 
அந்த நிறுவனத்திடம் சொன்னபோது அடுத்த 48 மணி 
நேரத்தில் அந்த கைப்பையை திரும்ப எடுத்துக்கொள்ள 
(Reverse Pickup), தூதஞ்சல் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு 
செய்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார்கள். மேலும் 
மின்னஞ்சல் மூலமாகவும் அதே செய்தியை தெரிவித்து, 
அந்த பையை திருப்பி அனுப்ப எந்த தொகையும் 
தரவேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள். நாங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை உடனே தீர்த்து 
வைக்கிறார்களே என மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் நவம்பர் 12 ஆம் தேதி வரை யாரும் வந்து திரும்ப 
எடுத்து செல்லவில்லை. உடனே அவர்களுக்கு மின்னஞ்சல் 
மூலம், 94 மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை 
என்று நினைவூட்டல் செய்தி அனுப்பியதும் நவம்பர் 13 ஆம் 
தேதி அசௌகரியம் தந்தமைக்கு வருந்துவதாகவும், 
அந்த பையை திருப்பி அனுப்பும்படியும்  
மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

ஆனால் பையை அனுப்ப ஆகும் செலவை தாங்கள் தருவதாகசொல்லவில்லை. அதுபற்றி அன்றே தொலைபேசியில் 
கேட்டதற்கு, வாடிக்கையாளர் மய்யத்திலிருந்த ஒருவர் 
பையை அனுப்புங்கள். செலவாகும் பணத்தை 
தந்துவிடுகிறோம். என்றார். அதை எழுத்து மூலம் தாருங்கள் 
என்றதற்கு  சரி செய்கிறோம். என்றார்.

அதற்குப் பிறகு எந்த பதிலும் வராததால் நவம்பர் 15 ஆம் தேதி,  
19. மற்றும் 20 தேதிகளில் நினைவூட்டல் அஞ்சல்கள் அனுப்பியும் இன்றுவரை எந்த வித பதிலும் இல்லை. காத்திருக்கிறோம் 
பதில் வரும் என்று!

வழக்கம்போல் கடைக்கு சென்று வாங்கியிருந்தால் நல்ல 
கைப்பையை பார்த்து வாங்கியிருக்கலாம். என் செய்ய! 
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை 
இப்போது உணர்கிறோம்.

அந்த நிறுவனத்தை  குற்றம் சொல்லி பயனில்லை. 
ஏனெனில் அவர்களின் பெயர் மூலம் நமக்கு 
சொல்லியிருக்கிறார்கள்.  Snap (the) Deal என்று!

1 comment:

  1. இது என்னுடைய பதிவு என்று போட்டிருந்தால் மகிழ்ச்கி அடைந்திருப்பேன்!

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...