Wednesday, December 10, 2014

வருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்!

சென்னை உயர் நீதிமன்றத்தில்  டிசம்பர் 4ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் வாகனங்களுக்கான உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை விரைவில் அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.
அது என்ன உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்?
''வாகனம் பற்றி தற்போது நடைமுறையில் இருக்கும் சில விதிமுறைகள், லைசென்ஸ்,  ஆர்.சி.புத்தகம், சாதாரண நம்பர் பிளேட்டுகள் போன்றவற்றில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டாலோ, வாகனங்கள் காணாமல் போனாலோ அந்த வாகனங்கள் மூலம் உரிமையாளரின் மொத்த விவரங்களையும் இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
ஒருமுறை பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ, கழற்றி வேறு வாகனத்தில் பொருத்தவோ முடியாது. அப்படி முறைகேடு செய்ய முயற்சித்தால், அந்த நம்பர் பிளேட் தானாக அழிந்துவிடும் வகையில், அதில் 'ஸ்நாப் லாக்’ தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நம்பர் பிளேட்களில் உள்ள விவரங்களை சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்தே காண முடியும். அதற்கேற்றவாறு இதில் குரோமியம் ஹாலோ கிராம் ஸ்டிக்கர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். நம்பர் பிளேட்டில் உள்ள 'ரெட்ரோ ரிஃப்ளக்டிவ்’ ஸ்டிக்கரில் 'இந்தியா’ என்று 45 டிகிரியில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அத்துடன் இடது ஓரத்தில் நீல நிறத்தில் ஐ.என்.டி என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டு இருக்கும். இதன் விலை சுமார் 1,000 ரூபாய் முதல் 1,200 வரை இருக்கும்.
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அமல்படுத்துவதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகளில் கடந்த 2001-ம் ஆண்டே திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. அதன்பின், படிப்படியாக சில மாநிலங்கள் மட்டும் இந்த முறையை அமல்படுத்தின. ஆனால், தமிழகம் அப்போது முதல் இதில் அசமந்தமாக செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து 200-6ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் விரைவில் அனைத்து மாநிலங்களும் இந்த நம்பர் பிளேட் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்திலும் அதற்கான வேலைகள் ஆமை வேகத்தில் தொடங்கின. அதற்கு முன்பு வரை 'ஸ்டிக்கர் தொழில் நுட்பம்’ மூலம் நம்பர் பிளேட்டுகள் தயாரித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு 'உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்’ தயாரிக்கும் தொழில் நுட்பத்துக்கு மாறின. ஆனால், இந்த நம்பர் பிளேட்டுகளை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்தான் தயாரிக்க முடியும் என்று விதிமுறை உள்ளது. எனவே, இதற்காக டெண்டர் விடப்பட்டன. ஆனால், டெண்டர் கோரிய நிறுவனங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை ஒருபக்கம், இந்தத் தொழிலில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் ஒருபக்கம் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தத் திட்டத்துக்கு, கடந்த 2012-ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அதன் பிறகு தமிழக அரசாங்கம் சார்பில், அந்தத் தடையை எதிர்த்தோ, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முனைப்பிலோ அந்த வழக்கில் மேற்கொண்டு எதையும் செய்யவில்லை.
மீண்டும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுகளை கடுமையாக எச்சரித்த உச்ச நீதிமன்றம், '2012, ஏப்ரல் 30-ம் தேதிக்குள் புதிய வாகனங்களுக்கும், ஜூன் 15-ம் தேதிக்குள் பழைய வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளைப் பொருத்த வேண்டும். இல்லையென்றால், நடைமுறைப்படுத்தாத மாநிலங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும்’ என்று எச்சரிக்கவும் செய்தது. ஆனால், அதன் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது'' என்றார் ஒரு போக்குவரத்துத் துறை அதிகாரி.
கோவையைச் சேர்ந்த எஸ்.கே.சந்தோஷ் என்ற முன்னாள் ராணுவவீரர் இந்தப் பிரச்னைகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றால், இப்போதும்கூட தமிழக அரசு வாய் திறந்து இருக்காது. விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்ததும், அரசு வழக்கறிஞர், ''டெண்டர் கோரிய நிறுவனங்கள் தடை வாங்கி உள்ளதால்தான் செய்யவில்லை'' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ''அவர்கள் தடை வாங்கியது 2012-ம் வருடம். ஆனால், அதற்கு நிவாரணம் தேட நீங்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? டிசம்பர் 17-ம் தேதிக்குள் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளனர்.
ஆக, தமிழகத்தின் வாகனங்களின் தலை எழுத்து மாறப்போகிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...