Wednesday, March 29, 2017

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

வடநாட்டில் இஸ்லாமியர் ஆக்கிரமித்த அயோத்தி இராமர் பற்றித்தான் சிந்திக்கிறோம்
தென் நாட்டில் வேளாங்கன்னியில் கிருஷ்தவ மிஷனரிகளின் பித்தலாட்டத்தை யாரும் கேள்வி கேள்வி கேட்பதே இல்லை ஏன்?
வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பது போல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.
தமிழ் சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)
சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.
”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜனாக்ஷி]; கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’. சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.
“வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண் பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? உலகம் உய்ய ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன். இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.
“மானெடுங்கண்ணி” என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்.
’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’
இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும்.
கடற்கரைச் சிவாலயங்கள்:
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.
”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”
என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசிமகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வருகிறது.
கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் – திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.
மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.
திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி
திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி
திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.
சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
– திருஞானசம்பந்தர்
நாகூர் – நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.
நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்துதித்த அதிபத்த நாயனார் வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.
முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.
இது போன்ற ஒரு கடல் தலம் தான் வேளாங்கண்ணியும்.
இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.
சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர். அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும்.
‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூட அங்கு தடை இருந்தது.
கிறித்தவ மிஷநரிகளின் கலாசாரத் திருட்டு:
காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷநரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
உமையன்னைக்கே உரியது ‘பெரிய நாயகி’ எனும் நாமம். புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில், இறைவன் பெயர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்), இறைவி பெயர் பிரகன்னாயகி (பெரிய நாயகி) என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பெயரை வெட்கமில்லாமல் களவாடி, ‘பெரியநாயகி மாதா’ எனக் கிறித்தவ மிஷநரிகள் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.
உண்மை சுடும் . கிறித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்தபட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
சில கேள்விகள்:
வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலை நிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன
.
’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ? விவிலிய ஆதாரம் உள்ளதா ?
இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்? போர்த்துகீசிய மாலுமிகளா, வாத்திகனில் உள்ள போப்பரசரா அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா?
ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?
திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?
இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?
ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?
வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ?
ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ?
வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?
லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?
பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத் தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ?
அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?
இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்?
மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை.
1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...