Thursday, March 23, 2017

இசை வியாபரம்.............

' எஸ்.பி.பி க்கு நோட்டீஸ் அளித்த இளையராஜா' இது தான் இப்போது முகநூலில் டிரெண்டிங். இதில் ராஜாவுக்கு ஒரு சாரரும், எஸ்பிபிக்கு ஒரு சாரரும் வரிந்து கட்டி முகனூல் பக்கங்களில் நிரம்பி வழிகிறார்கள். யார் சரி? என்கிற வாதம் போய் தமிழன் , தெலுங்கன் என்கிற பிரிவினை வந்திருப்பது தான் அறியாமையின் உச்சம்.
இதில் இளையராஜாவை, 'பேராசை பிடித்தவர், பொறாமை பிடித்தவர்', என்கிறார்கள்.
'நட்பை கொச்சைபடுத்தி விட்டார்' என்கிறார்கள்
'கர்னாடக சங்கீத்திலிருந்து தானே பாடல்களை உருவாக்கினார். அப்போ யாருக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் ?''
'இவர் இசையமைத்ததற்கு தான் சம்பளம் வாங்கி விட்டாரே ? பின்னே எதுக்கு இப்போ பணம் கேட்கிறார்?'
'இனி, அவரது பாடலை முனுமுனுத்தாலும் காசு கொடுக்க வேண்டுமா?'
என ஏகத்துக்கும் கேள்வி கேட்டு ,, அவரைக் கிண்டல் செய்வதாக, தங்கள் மேதாவிதனத்தை வெளிக்கொணர முயல்கிறார்கள்.
இளையராஜாவுக்காக இல்லையென்றாலும் , இந்த விவாகரத்தின் நியாயத்தன்மையினை ஓரளவிற்காவது தெரிந்து கொண்டால், இது தொடர்பான நம் பதிவுகளின் தரம் உயரக்கூடும்.
இளையராஜாவுக்கும் பில் கேட்ஸுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே சரியான ராயல்டி கிடைக்காமல் இந்திய மக்களால் ஏமாற்றப்பட்டவர்கள்.
ஒட்டு மொத்த இந்தியாவிலும் 17% கணினிகளில்தான் மைக்சரோ சாப்ட் , ஆபிஸ் தொகுப்பு பணம் செலுத்தி காப்புரிமை பெற்று பயன்படுத்தப்படுகிறது. மற்றதெல்லாம் ஓசி , வீடியோ பைரஸி தான்.
பில்கேட்ஸுக்க்காவது 17% .
ராஜாவுக்கு பூச்சியம் தான். ( ராஜாவின் பாடலை ஒரு முறைக் கேட்க, ராயல்டி கொடுக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிஞ்சாது - சொன்னவர், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா)
'' அது தான் அந்தப் படத்தில், ராஜாவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதே?''
வெளிவந்து 30 ஆண்டுகள் ஆன, 'இன்று போய் நாளை வா' படத்தை உல்டா செய்து , சந்தானம் ' 'லட்டு தின்ன ஆசையா?' எடுத்தால், பாக்கியராஜ் ' அது என் கதை ' என்று ஏன் கோர்டுக்கு போகிறார்? அவர்தான், அந்தப் படத்தில், அதற்குரிய சம்பளம் பெற்றுவிட்டாரே.
காரணம் இது இண்டலக்சுவல் காபிரைட்..
( வழக்குக்குப் பின்னர், ' லட்டு தின்ன ஆசையா? டீமிடமிருந்து ரூ.10 லட்சம் பெற்றார் பாக்கியராஜ் )
பழைய படமான 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தை உல்டா செய்த சி. சுந்தரும், அதன் டைரக்டருக்கு, உரிய இழப்பீடு தந்தார் ( அரண்மனை படத்திற்காக)
முழு நீள சினிமாவை, ஒரு படைப்பாளியின் 'இண்டலக்சுவல் சொத்தாக' பாவிக்கும் நாம், ஐந்து நிமிட திரைப்பாடலை அப்படி ஏன் நினைப்பதில்லை?
''கர்னாடக சங்கீத்திலிருந்து தானே பாடல்களை உருவாக்கினார்.''
எல்லா மேதைகளும் 'கர்னாடக சங்கீத்திலிருந்து உருவாக்கிட முடியாது. 'ஆலுமா டோலுமா' எந்த ஸ்வரம்?
சொல்லப்போனால், 'கர்னாடக சங்கீதம் என்பது பல பாறை அடுக்குகள் கொண்ட, மிகப்பெரிய மலைத் தொடர், அதிலிருந்து நம் ரசனைகளை அர்த்தமுள்ளதாக்கும் சிறு சிறு சிற்பங்களை கண்டறிந்து நமக்கு காட்சிப்படுத்தியவர் ராஜா.
ராஜா வருவதற்கு முன்பு வெறும் அம்மிக்குழவிகள் தான் நமக்குக் கிடைத்தது. இப்போது கிடைப்பதோ வெறும் ஜெல்லிக் கற்கள்..
கர்னாடக சங்கீதம் என்கிற உயர்மட்ட இசைக்கோர்வையை சாதரண இசை என்கிற வளையத்துக்குள் கொண்டு வந்தது தான் ராஜாவின் ' இண்டலக்சுவல் சொத்து'. அது அவரது அறிவு. அவரது உழைப்பு.
பொதுவாக ஒரு பாடலின் ஆடியோ உரிமை, குறிப்பிட்ட காலம் வரை தயரிப்பாளருக்கும், பிறகு அதன் உரிமையாளரான ராஜவுக்கும் திரும்ப வந்து விடும்.
'மிஸ்டர் ஜோக்கர்' போன்ற பதிவர்கள் சொல்வது போல , வாயில் முனுமுனுப்பதற்கெல்லாம், டிவி நிகழ்ச்சிகளில் பாடுவதற்கெல்லாம் , கோயில் திருவிழாக்கள், கல்யாண வீடுகளில் கச்சேரிகளில் பாடுவதற்குக் கூட, அவர் ராயல்டி கேட்கவில்லை. ( இன்று எத்தனை ரேடியோ, டிவி நிகழ்ச்சிக்கள், இன்னிசை குழுக்கள் ராஜாவின் பாடலைக் கொண்டு பிழைக்கின்றன? )
வணிக நோக்கத்திற்காக, பெரிய நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, என் பாடல்களைப் பாடிக் காசு சம்பாதித்தால், எனக்கு அதில் ஒரு பாகம், ராயல்டியாக கொடு எனக் கேட்பதா பேராசை?
என் அறிவைக் கொண்டு நீ பிழைக்க நினைப்பது எப்படி சரி? என்ன ஒரு மட்டமான் புத்தி?
''ராஜாவிடம் அப்பா 2000 பாடல்கள் தான் பாடியிருக்கிறார், மற்ற இசையமைப்பாளர்களிடம் அவர் பாடிய மீதி 38,000 பாடல்கள் கொண்டு நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம்'' என்கிறார் சரண்.
சரி! அப்போ ஏன் அந்த 2000 பாடல்களையே இதுவரை எல்லா நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பாடிக் கொண்டிருக்க வேண்டும்?
நியாயமாக ஒரு கச்சேரியில் எஸ்பிபி 40 பாடல்களை பாடினால், நீங்கள் சொன்ன விகிதத்தின் படி, 2 தானே ராஜாவின் பாடலாக இருக்க வேண்டும்? ஆனால், நீங்கள் ஏன் ஒவ்வொரு கச்சேரியிலும் ராஜாவின் 30 பாடலையாவது தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அப்படியெனில், சரக்கு உள்ள பாடல் ராஜாவின் பாடல்தானே ?
அதற்கு தான் ராயல்டி கேட்கிறார் ராஜா?
இப்பொழுது கூட , ''ராஜாவின் பாடல்களை பாட மாட்டோம்'' என்று தான் எஸ்பிபி சொல்கிறாரே தவிர, 'அவருக்கு காசு கொடுத்து விட்டு, பாடுவோம்' எனச்சொல்ல, எஸ் பி பி க்கு வாய் வரவில்லை, மனசும் வரவில்லை.. யார் பேராசை பிடித்தவர்?
எஸ்.பி.பி இந்தியாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர்..
அதனால் என்ன? திறமையானவர்கள் எல்லாம், நல்லவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.
நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில்,
ஒரு பதிப்பாளர் ஒரு எழுத்தாளரை வைத்து புத்தகம் போடுகிறார், அதை அழகுற வடிவமைத்து அச்சிடுகிறார் ஒரு பிரிண்டர் ( அச்சகம்) . அந்த புத்தகம் நன்றாக விற்பனையாகவே, அந்த பிரிண்டர் தானாகவே அந்த புத்தகத்தை அச்சடித்து எழுத்தாளருக்கு ராயல்டி தராமால் விற்றால், அது குற்றம் தானே? காப்பிரைட் சட்டம் அவர் மீது பாயும் தானே?
சாதரண சட்ட நுணுக்கம் இது, ஏன் பெரும்பாலோருக்கு புரியவில்லை?
எழுத்தாளர் ராஜா என்றால், பிரிண்டர் தான் எஸ்பிபி.
எஸ்.பி.பி. திறமையான பிரிண்டர் தான். அதாவது, பாடகர்தான். ஆனால், அவரையும் மிஞ்ச பல பாடகர்கள் பரந்த இந்தியாவில் பலபேர் உண்டு,.
ஆனால், ராஜாவுக்கு ஒப்பாரும், மிக்காரும் இந்த பூமித்தட்டில் இல்லை.
இசை என்பது என்ன? என்று தெரியாதவர்களுக்குக் கூட, தன் இசையின் மகத்துவத்தை கொண்டு சேர்த்தவர் என்ற வகையில் ராஜாவின் இசை ஒரு மேஜிக்.
எத்தனையோ சிறந்த சாகாவரம் பெற்ற பாடலை எம் எஸ் வி, மகாதேவன், பர்மன் போன்றோர் கொடுத்திருக்கிரர்கள் தான். ஆனால்,மனதுக்கு நெருக்கமாக உறவாடும், இசையின் நீள அகலங்கள் அறியாதோரையும் மயக்கம் கொள்ளச் செய்யும் சப்த ஸ்வரங்களை ராஜாவால் மட்டும் தான் உருவாக்க முடிந்தது.
சில நாட்களுக்கு முன், டிவி நிகழ்ச்சி ஒன்றில் ' தென்றல் வந்து தீண்டும் போது' என்கிற பாடலை ஒரு சிறுமி பாடினாள்,. பாடி முடித்ததும் அவள் கண்களில் கண்ணீர், ஜட்ஜுகள், அரங்கத்தில் இருப்பவர்கள், ஆர்கெஸ்ட்ரா, எல்லோர் கண்களிலும் கண்ணீர்.
சாதரண குரல் வளம் கொண்ட ஒரு சிறுமி, ஒரு சுமாரான ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து பாடும்போதே இந்த் அவுட் புட் என்றால். அந்த ராகமும், இசைக்கோர்வையும் நம் மனதை பிழிய வைக்கிறதென்றால், ராஜாவின் 'மியூசிக்கல் வேவ்' என்பது வெறும் சத்தமா? இந்தப் பெருமையும், உரிமையும் ராஜாவுக்கு போக வேண்டாமா?
இது கூட ராஜாவின் தாமதமான நடவடிக்கைதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதை ராஜா நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.
உங்களில் பெரும்பாலோர்க்கு தெரியாத இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன்.
இசைத்திருப்புதல்வர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல்களை , மேடைகளில் , கச்சேரியில் பாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்களின் இல்லம், வாரிசுகளைத் தேடி கொடுத்தவர் அவரது புதல்வர் சீர்காழி சிவசிதம்பரம். அது மட்டுமல்ல,அப்பாவின் பாடல்களை பாடி அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை அவரது இரு சகோதரிகளுக்கும் கொடுத்து விடுகிறார். '' நியாயமா அப்பாவின் சொத்து தானுங்களே அது'' எனக்கூறுகிறார்..
( 1997 குமுதத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து...)
திரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் காப்பிரைட் சட்டம் பற்றியெல்லாம் தெரியாதவராக இருக்கலாம். ஆனால், மனச்சான்றின் விளிம்புகளை உணர்ந்தவர் .ஆனால், பாலு?
அடுத்ததாக தாமஸ் ஆல்வா எடிசன், நீங்கள் பல பேர் அறியாதது..
நாம் காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு மின்விளக்கின் விற்பனை விலையில் 0.08% தொகை எடிசன் குடும்பத்தாருக்கும், அவர்களின் வாரிசுகளுக்கு
 இன்றும் வாழையடி வாழையாக போய்க்கொண்டிருக்கிறது.
அதாவது எடிசன் குடும்பத்துக்கு, பங்கு தராமல் உங்கள் வீட்டில் விளக்கு எரியாது.
இதுதான் அறிவுசார் சொத்தின், அழியாத வருமானம்.
' பாடல் வெற்றி, அந்த வரிகளை எழுதியவருக்கும் சொந்தம்..' இடையில் மதன் கார்க்கி நுழைந்திருக்கிறார்.
'வாங்க சார்!,
உங்க அப்பா எழுதிய ' வெட்டி வேரு வாசம், விடலை புள்ளை நேசம்" வரிகளை அனிருத், தேவிபிரசாத், ஏன் ரஹ்மான் போன்றோரிடம் கொடுத்து , அதை எஸ்.பி.பி க்கு மேடையில் பாடச்சொல்லுங்களேன். யார் தடுத்தார்?'
'வரிகளை எடுத்தாள்வதில் யாதொரு தடையுமில்லை, சின்னக் கவிப்பேரரசு, கார்க்கி அவர்களே!.
ஒரிஜினல் பாடலில் வந்த ராகத்தை, தாளத்தை, மெட்டை, இசைக்கோர்வையை அப்படியே எடுத்தாள்வீர்கள்? என்றால் தான் காசு கேட்கிறார் இளையராஜா...
அதுபோக, ஒரு உதாரணத்திற்கு..
''நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன்"
இந்த வரிகளில் என்ன பொல்லாத அமரத்துவம், கவித்துவம் ஒளிந்திருக்கிறது..
ஆனால், இந்த வெற்று வரிகள், வார்தைகள் ராஜாவின் இசை வண்ணத்தில் ஒளிக்கும் போது, ராஜ நிர்ணயித்த இசை மேடு பள்ளங்களில் பாய்ந்து, நிறையும் போது, செவிகளுக்குள்ளாக ஒரு மாயாஜாலம் ஏற்படுகிறது அல்லவா? அதற்கு தான், 'மினிமம் ராயல்டி கொடு' என்கிறது ராஜாவின் தரப்பு.
ஒவ்வொரு பாடலையும் பாட ஆரம்பிக்கும் போது அல்லது முடித்த பிறகு எஸ்.பி.பி.
' ராஜா என்னமா கம்போஸ் செஞ்ச்சிருக்கார்' னு தவறாமல் பாராட்டி, பாராட்டியதெல்லாம், , ராஜா மகிழ்ந்து போய், மேற்கொண்டு ராயல்டி சண்டைக்கு வந்து விடாமல் இருக்கச் செய்த தந்திரமே...
இப்போது முகனூலில் எஸ்.பி.பி, 'இது தான் கடவுள் சித்தம் என்றால், அதை நான் ஏற்கிறேன்" என்கிறார், அதே கடவுள், 'ராஜவுக்கு போக வேண்டிய தொகையைக் கொடு' என்று ஏன் சொல்லாமல் இருக்கிறார்.
''இது நட்பு ரீதியானது, முகனூலில் யாரும் ராஜவுக்கு எதிராக கடினமான வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்' என்கிறார் தி கிரேட் எஸ்பிபி.
அதாவது, அப்படி ஒரு எண்ணம் இல்லாதவர்களைக் கூட, மறைமுகமாக பேசத் தூண்டுவது தான் இதன் பொருள். இது பணிவல்ல, பாசாங்கு..
ராயல்டி தொகைக்காக ராஜா சண்டை போடவில்லை, தான் ஒரு ஏமாளி என்கிற போர்வையை தூக்கி வீசத் தான் போராடுகிறார்.
ஒரு படைப்பாளியாக நீங்கள் இருந்தால் , நீங்களும் இதை உணர முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...