Sunday, March 26, 2017

மருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி....

இந்த தலைப்பை பார்த்ததும், 'நீங்கள் என்ன மருத்துவரா அல்லது மருத்துவர்களுக்கு எதிராக வெளிவந்த, ரமணா படக் குழுவை சேர்ந்தவரா...' என்று, என்னைப் பற்றி உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்; நியாயம்!
ஆனால், கண்ணெதிரே நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது, சில நேரங்களில், மருத்துவ கத்திகளே, தீங்கிழைக்கும் கத்திகளாக ஆகிப் போகின்றன என்பதை, நன்கு உணர முடிகிறது.
கஷ்டப்படும் என் உறவினர் பெண்ணிடம், 'பம்மலில் சங்கர மடம் நடத்தும் கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள். இந்த அமைப்பு, சேவை நோக்கம் உடையது; காசு பறிக்காதது...' என்று சொன்னேன்; என் சொல்லை பொருட்படுத்தாமல், ஒரு டாம்பீக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டார். 60 ஆயிரம் ரூபாய் பில்; ஆடிப் போனது குடும்பம்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில், என் உறவினர் மருத்துவராக உள்ளார். இவருக்கு, 'மாதம் இவ்வளவு, 'ஸ்கேன்'களுக்கு நீங்கள் நோயாளிகளை தர வேண்டும்...' என்று, பொருளை விற்கும் சந்தை மேலாளருக்கு நிர்ணயிப்பது போல், இலக்கு நிர்ணயித்துள்ளது, மருத்துவ நிர்வாகம்.
'மனசாட்சிக்கு விரோதமாக, ஒன்றுமில்லாதவர்களுக்கு கூட, 'ஸ்கேன்' செய்யச் சொல்லி, அனுப்ப வேண்டியுள்ளது...' என்று, ரகசியக் குரலில் சொன்னதோடு, 'மனசாட்சிக்கு விரோதமாக நடக்க வேண்டியுள்ளதால், நியாயமான மருத்துவமனையாக தேடி வருகிறேன்...' என்றார்.
இதைக் கேட்டு, உண்மையில் ஆடிப் போனேன்.
'உடனே ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், நீங்கள் காலி...' என்று ஒரு மருத்துவமனையால் எச்சரிக்கப்பட்ட நோயாளி நண்பர் ஒருவர், நியாயமான மருத்துவரிடம் காட்டி, வெறும் மருந்துகளாலேயே தன்னைக் குணப்படுத்திக் கொண்டார்.
எனவே, கவனமான மருத்துவமனை தேர்வும், பலருடன் கலந்து பேசி, நன்கு விசாரித்து செய்யப்படும் மருத்துவர் தேர்வும், நம் மருத்துவச் செலவுகளை, ஏகமாய் மிச்சப்படுத்தும்.
வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால், நம்மில், 98 சதவீதம் பேர், உடல் நலனில் அக்கறை உள்ளது போல் நடிக்கத்தான் செய்கிறோம். உண்மையில், நம் உடல் நலன் மீது, நமக்கு அக்கறை இல்லை.
'நெஞ்சில் குத்துவது போல் இருக்கிறது; வாயு பிடிப்புன்னு நினைக்கிறேன். எனக்கு ஒண்ணும் செய்யாது. டாக்டர்கிட்டே போனா பெரிய செலவா இழுத்து (!) விட்டுடுவாங்க...' என்று சொன்னவர், எமன் கிட்டே போய் விட்டார், பாவம்.
'பல்லு வலிக்குது...'
'எத்தனை நாளா?'
'ஒரு வாரமா...'
'டாக்டர் கிட்டே காண்பிக்கலையா?'
'எங்கே நேரமிருக்கு... வேலை சரியா இருக்கு. தங்கச்சி வீட்டில விசேஷம்; போயிட்டு வந்து காட்டலாம்ன்னு இருக்கேன்...' என்றவர், ஒரு நடு ராத்திரியில் உயிர் போகிற பல் வலியில் துடித்து, கதறி விட்டார். 'ரொம்பவே சீழ் வச்சிருச்சு; ஒரு வாரத்திற்கு முன் வந்திருந்தீங்கன்னா, சிகிச்சையில் இவ்வளவு சிக்கல் இருந்திருக்காது....' என்றார், பல் மருத்துவர். மருத்துவ செலவும் அதிகமானது.
சிறு தொல்லையை, ஆரம்பத்திலேயே கவனிப்பது, செலவை ஏகமாய் மிச்சப்படுத்தும் என்பது, அடுத்த உண்மை!
நீர் இறைக்கும் மோட்டாருக்கு எண்ணெய் விடலாம்; ரத்தம் இறைக்கும் இதய மோட்டாருக்கு, ஏன் எண்ணெய் விட வேண்டும்... எண்ணெய் மற்றும் கொழுப்பு பலகாரங்களாகவே தின்கிறோமே!
வாயால் தேனொழுகப் பேசலாம்; இனிக்கும் விதமாக உரையாடலாம். ஆனால், நீரழிவு நோயின் பொல்லாத குணம் தெரிந்தும், வாய்க் கட்டுப்பாடு இன்றி, வெளித் தள்ள வேண்டிய இனிப்பை, உள்ளே தள்ளுகிறோம்!
எது உடம்பிற்கு ஆகாதோ, எது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமோ, அவற்றில் மட்டுமே நாட்டம் செல்லும் நாக்கு, கட்டுப்பாடு இல்லாமையால், எவ்வளவு பெரிய செலவினத்தில் நம்மை கொண்டு போய் நிறுத்தி விடுகிறது தெரியுமா!
சொத்து மற்றும் பணம் சேர்க்கலாம்; கார்போ ஹைட்ரேட்டையும், கொழுப்பையும் அல்லவா நாம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்... உடனுக்குடன் செலவிட வேண்டிய இவற்றை, நடந்து நடந்து குறைக்க வேண்டாமா... இவை இரண்டும் நாம் சேர்த்த பணத்திற்கு வேட்டு வைக்கும் வெடிகுண்டுகள் அல்லவா... கலோரிகளை குறைக்க, களத்தில் இறங்காமல், 'கேலரி'யில் அல்லவா அமர்ந்து கொள்கிறோம்.
நிறைவாக ஒன்று... மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை நம்மவர்கள் உணராமல் இருக்கின்றனர். வயதாகி விட்டால் கூட, பிள்ளைகளின் பெயரால், காப்பீட்டின் உள்ளே நுழைந்து விடலாம். காப்பீட்டிற்குள் நுழைந்து விட்டால், அதன்பின், மருத்துவ பில் எத்தனை லட்சம் என்றாலும், நம்மால் நம்பியார் சிரிப்பு சிரிக்க முடியும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...